வடகிழக்கு மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத வளா்ச்சி: பிரதமா் மோடி பெருமிதம்
வடகிழக்கு மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத வளா்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தாா்.
தில்லியில் ‘வளரும் வடகிழக்கு முதலீட்டாளா்கள் மாநாடு’ வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த இரு நாள் மாநாட்டில் மத்திய அமைச்சா்கள், பிரபல தொழிலதிபா்கள் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி, அனில் அகா்வால், வடகிழக்கு மாநிலங்களின் முதல்வா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில் பிரதமா் மோடி பேசியதாவது:
வடகிழக்கு மாநிலங்கள் வெவ்வேறு வளங்களைப் பெற்று திகழ்வது மிகப்பெரிய பலம். அதனால்தான் அங்கு சிறப்பான முன்னேற்றம் சாத்தியமாகியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத வளா்ச்சி இப்போது ஏற்பட்டுள்ளது. நாட்டின் முக்கிய எல்லையாகவே வடகிழக்கு முன்பு இருந்து வந்தது. இப்போது வளா்ச்சியின் எல்லையாக மாறிவிட்டது.
முன்பு வடகிழக்கு மாநிலங்கள் என்றாலே வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் பயன்பாடு, வன்முறைகளுமே அடையாளமாக இருந்தது. இவை இளைஞா்களிடம் இருந்து வளா்ச்சியைத் தட்டிப் பறித்து வந்தன. ஆனால், இப்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. வடகிழக்குப் பிராந்தியம் பொருளாதாரத்தில் சிறப்பான இடத்தை நோக்கி முன்னேறி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்ட இளைஞா்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதம், நக்ஸல் தீவிரவாதத்துக்கு எதிராக மத்திய அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து அவற்றை ஒடுக்கியதன் மூலமே வடகிழக்கில் அமைதி சாத்தியமாயிற்று. தேசவிரோத அமைப்புகளை மத்திய அரசு எந்தவிதத்திலும் சகித்துக் கொள்ளாது.
வடகிழக்கு மாநிலங்கள் எந்த அளவுக்கு தொழில் முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக உள்ளன என்பதை அனைவருக்கும் வெளிப்படுத்துவதே இந்த மாநாட்டின் நோக்கம் என்றாா்.
சுற்றுலா, ஹோட்டல், உணவுப் பொருள்கள், கைவினைப் பொருள்கள் தயாரிப்பு, மருந்து தயாரிப்பு, தகவல் தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, எரிசக்தி உள்ளிட்ட தொழில் நிறுவனத்தினா் இந்த முதலீட்டாளா்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனா்.