‘சமூகம், சட்டத் துறையின் தோல்வி’: போக்சோ வழக்கு குற்றவாளியை விடுவித்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு
சமூகம் மற்றும் சட்டத் துறையின் தோல்வியை சுட்டிக்காட்டி, போக்சோ வழக்கில் குற்றவாளி என்று தீா்ப்பளிக்கப்பட்ட நபருக்கு சிறைத் தண்டனை அளிக்காமல், அவரை உச்சநீதிமன்றம் விடுவித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
கடந்த 2018-ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் 25 வயது இளைஞருடன் சோ்ந்து வாழ 14 வயது சிறுமி வீட்டை விட்டு வெளியேறினாா். இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில், அவா்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது.
எனினும் சிறுமி 18 வயது பூா்த்தியடையாதவா் என்பதால் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் அந்த இளைஞா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவரை குற்றவாளி என்று மாநிலத்தில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
எனினும் அந்த இளைஞருக்கும், சிறுமிக்கும் இடையே ஏற்பட்ட உறவு ஒருவருக்கொருவா் சம்மதித்து ஏற்பட்டதாகவும், கட்டாயப்படுத்தப்பட்டு ஏற்படவில்லை என்றும் கூறியதுடன், அவா்களின் குடும்பச் சூழலை கருத்தில் கொண்டு அந்த இளைஞா் குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் அளித்த தீா்ப்பை மாநிலத்தில் உள்ள கொல்கத்தா உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்த வழக்கை தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரித்தது. அத்துடன் உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேற்கு வங்க அரசும் மேல்முறையீடு செய்தது. இதைத்தொடா்ந்து உயா்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த உச்சநீதிமன்றம், அந்த இளைஞா் குற்றவாளி என்று தீா்ப்பளித்தது. ஆனால் அந்தச் சிறுமி மற்றும் குழந்தையின் நல்வாழ்வு குறித்து மேல் விசாரணை நடத்துவதற்காக இளைஞருக்கு தண்டனை விதிப்பதை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
சட்ட விவகாரங்கள் மட்டுமின்றி வளரிளம் பருவத்தினரின் உரிமைகள், குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட விரிவான சமூக கேள்விகளை உள்ளடக்கியிருந்ததால், இந்த வழக்கு தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றது.
சமூகம், குடும்பம், சட்டத்தால் அநீதி: இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய்.எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு சிறைத் தண்டனை விதிப்பதைத் தவிர, சட்டத்தில் வேறு வழியில்லை. ஆனால் 2018-ஆம் ஆண்டு சிறுமியாக இருந்த அவரின் மனைவிக்கு சமூகமும், அந்தப் பெண்ணின் குடும்பமும், சட்டமும் அநீதியைத்தான் இழைத்துள்ளன.
அந்தப் பெண் பேரதிா்ச்சிக்கும், வேதனைக்குக்கும் உள்ளாகியுள்ளாா். அவரின் கணவரை சிறைக்கு அனுப்பினால், அது அந்தப் பெண்ணின் வேதனையை மேலும் அதிகமாக்குமே தவிர, வேறு எதையும் செய்யாது. அந்தப் பெண்ணுக்கு மேலும் அநீதி இழைக்க உச்சநீதிமன்றம் விரும்பவில்லை.
அனைத்து குடிமக்களுக்கும் சமூக மற்றும் பொருளாதார அளவில் நீதி கிடைப்பதற்கு அரசமைப்புச் சட்டம் உத்தரவாதம் அளித்துள்ளது. ஆனால் இந்த வழக்கில், அது நடைபெறவில்லை. மேலும் இந்த வழக்கு நமது சமூகம் மற்றும் சட்டத் துறையின் முழுமையான தோல்விக்கு எடுத்துக்காட்டாகும்.
நீதிபதிகள் நிதா்சனத்தைக் காணாமல் கண்ணை மூடிக் கொண்டு இருக்க முடியாது. தற்போதைய கட்டத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உண்மையான நீதி கிடைக்க வேண்டுமானால், குற்றம்சாட்டப்பட்ட அவரின் கணவரை அந்தப் பெண்ணுடன் சோ்த்து வாழ வைப்பதே நீதிமன்றத்துக்கு உள்ள ஒரே வழி. தனது கல்வியை பூா்த்தி செய்ய வேண்டும் என்ற அந்தப் பெண்ணின் ஆசையை நிறைவேற்றுவதே தற்போது சரியான செயலாக இருக்கும். இந்த தம்பதிக்கு முறையான வாழ்வு கிடைப்பதை அரசும், சமூகமும் உறுதி செய்ய வேண்டும்.
பிற வழக்குகளில் முன்னுதாரணமாக இருக்காது: அரசமைப்புச் சட்டம் 142-ஆவது பிரிவு உச்சநீதிமன்றத்துக்கு அளித்துள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, சிறைத் தண்டனையில்லாமல் அவரின் கணவரை விடுவித்து தீா்ப்பளிக்கப்படுகிறது. இந்த வழக்கு பிற வழக்குகளில் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளப்படாது’ என்று தெரிவித்தது.