Diamond Hunting: ஆந்திராவில் `வைர வேட்டை' - மழைக்காலங்களில் கிடைக்கும் வைரம்? -படையெடுக்கும் மக்கள்
ஆந்திராவின் வைரம் விளையும் மண்ணாக ராயலசீமா கருதப்படுகிறது. ராயலசீமா பகுதியில் பெய்து வரும் மழை, கர்னூல், அனந்தபூர் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் கிராமவாசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடும் பருவமாக மாறியுள்ளது.
இந்த மழைக் காலங்களில் பூமியில் வைரம் கிடைக்கும் எனற நம்பிக்கையில் பலரும் அந்தப் பகுதிகளில் வைர வேட்டையை தொடங்கியிருக்கின்றனர்.
வைரக் கண்டுபிடிப்புகளுக்குப் பெயர் பெற்ற ஜோனகிரி, துக்காலி, பெரவலி மண்டலங்களில் தங்கள் அதிர்ஷ்டத்தை சோதிக்க ஆர்வமுள்ள கிராமவாசிகள், வியாபாரிகள், வெளியூர் மக்கள் என பலரும் வைரத்தை தேடி வருகின்றனர்.

ராயலசீமாவில் வைரமா?
வைரம் என்பது 100% கார்பனில் இருந்து உருவாகும் ஒரு படிகம். இது பூமியின் அடியில் சுமார் 150–200 கிமீ ஆழத்தில், அதிக அழுத்தம் மற்றும் வெப்பநிலையில் உருவாகிறது.
ராயலசீமா பகுதியில் பழமையான எரிமலை இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இவை கிம்பர்லைட் குழாய்கள் (Kimberlite pipes) போன்ற அமைப்புகளை உருவாக்கியிருக்கலாம்.
இந்த குழாய்கள் காலப்போக்கில் மண்ணின் கீழ் புதைந்து வைரக் கற்களை உருவாக்கியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். உலகில் முதன்முதலில் இந்தியாவில்தான் வைரம் கண்டுபிடிக்கப்பட்டது.
குறிப்பாக கோல்கொண்டா, பல்லாரி, பண்ணா, ராயலசீமா பகுதிகள் வைரங்களுக்கு பெயர் பெற்றவை. அந்த வைர கற்கள் மழைக்காலங்களில் மண் அரிப்பு காரணமாக வெளியே தெரிவதாகக் கூறப்படுகிறது.
வைரம் கிடைத்தவர்கள்?
"நீங்கள் ஒரு வைரக் கல்லைத் கண்டுபிடித்தாலும், அது உங்கள் வாழ்க்கையையே திருப்பிப்போட்டுவிடும். நான் 2018-ல் வைர கற்களைக் கண்டுபிடித்தேன். அதில் ஒன்றை ரூ8 லட்சத்துக்கு இந்த ஆண்டு விற்றேன்.
இந்த வைரக்கல் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது," என்கிறார் தெலுங்கானாவின் மஹபூப்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழில்முனைவோர் பாரத் பலோட்.

சமூக சேவகியான தீபிகா துசகாந்தி, ``நான் இந்தப் பகுதில் ஒரு வைரக் கல்லை கண்டெடுத்தேன். அதை ரூ.5 லட்சத்துக்கு விற்று ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக செலவழித்தேன்.
இந்த ஆண்டு ரூ.10 லட்சம் மதிப்புள்ள வைரக் கல் கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன். ஏராளமான குழந்தைகள் கல்விக்காக காத்திருக்கிறார்கள்." என்றார்.
தொல்பொருள் ஆராய்ச்சி மாணவரான நமன், ``நான் தெலுங்கு வரலாற்றைப் படிக்க வந்த மாணவன். எனது படிப்புக்கு நிதியளிக்கவும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காகவும் உதவும் என்ற நம்பிக்கையில் வைர கற்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்" என்றார்.
காவல்துறை என்ன சொல்கிறது?
இந்த வைர வேட்டை குறித்து கர்னூல் டிஐஜி கோயா பிரவீன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ``கர்னூல், அனந்தபூர் மாவட்டங்களில் வைரங்கள் பற்றிய நாட்டுப்புறக் கதைகள் நிறைய இருக்கின்றன.
வேலைக்காக வெளியூர் செல்லும் மக்கள் கூட மழைக்காலங்களில் சொந்த ஊர் வந்துவிடுகிறார்கள். வைரம், அதிகப் பணம் சம்பந்தப்பட்டிருந்தாலும் எந்த குற்றங்களும் இதுவரை பதிவாகவில்லை.
சில நேரங்களில் கிராமவாசிகள் நிலத்தை தங்களுடையது என்று கூறிக்கொள்வார்கள். சில சமயங்களில் வெளியூர் ஆள்கள் ஊருக்குள் வரக்கூடாது எனப் பிரச்னை நடக்கும். ஆனால் இதுவரை பெரிய தகராறுகள் அல்லது குற்றச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை." என்றார்.