முதல் சுற்றிலேயே தோல்வி: விரக்தியால் டென்னிஸ் ராக்கெட்டை உடைத்த மெத்வதேவ்!
கனிம வளக் கொள்ளையை தட்டிக் கேட்டவர் கொலை: தேனியில் பரபரப்பு!
தேனி மாவட்டம், கம்பம் பாரதியார் நகர் பகுதியில் வசித்து வந்தவர் சதீஷ்குமார் என்ற சசி ( 40), கம்பத்தில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் தொழில் செய்து வந்தார். கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி பேரூராட்சியில் சங்கிலிக்கரடு என்ற இடத்தில் வருவாய்த்துறைக்கு சொந்தமான கல்குவாரிகள் உள்ளது. இங்கு கல் உடைப்பதற்கு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அனுமதி வழங்பட்டுள்ளது. இதில் சில கேரளாவை சேர்ந்த பணக்காரார்கள் இந்த கனிம வளங்களை தங்களுடைய மாநிலத்திற்கு கொண்டு செல்வதாகவும் புகார்கள் உள்ளது. இதில் காமய கவுண்டன் பட்டி ஊர்காரர்களுக்கும் கல் உடைக்க உரிமை உள்ளது என்று சசி தரப்பினர் கல் உடைப்பதற்கு அனுமதி வழங்க கோரியும் மேலும் இங்கு எடுக்கபடும் கனிம வளங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்வதை தடுத்திட கோரியும் தொடர்ச்சியாக பார்வர்டு கட்சி சார்பாக போராட்டங்களையும் நடத்தி கொண்டிருந்துள்ளனர். இதனால் இந்த கல்குவாரி பிரச்னை தொடர்பாக சசிகுமாருக்கும் எதிர் தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு காமய கவுண்டன்பட்டியில் உள்ள சமுதாயக்கூடத்தில் கல்குவாரி சம்பந்தபட்டவர்கள் சசியை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அப்போது அங்கு இருந்த காமய கவுண்டன்பட்டி பகுதியைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் சசியை கழுத்தில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் சசி கீழே சரிந்து விழுந்துள்ளார். இதனைக் கண்ட அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த சசியை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் சம்பவம் குறித்து ராயப்பன்பட்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சசி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த சசியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இந்த கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி அரசு மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.