தமிழக-கேரள எல்லையில் கனமழை: அமராவதி அணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றம்
Doctor Vikatan: சளி பிடித்திருக்கும்போது சிக்கன் சூப்பும் நண்டு ரசமும் குடிப்பது சரியானதா?
Doctor Vikatan: சளி பிடித்திருந்தாலோ, உடல் அசதியாக இருந்தாலோ சிக்கன் சூப், சிக்கன் உணவுகள் சாப்பிடச் சொல்கிறார்களே.. அது சரியா?
பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார்
நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். சளி பிடித்திருந்தாலோ, உடல் சோர்வாக இருந்தாலோ, ஆட்டுக்கால் சூப், நண்டு சூப், நாட்டுக்கோழி ரசம் போன்றவற்றைக் குடிக்கச் சொல்லி அறிவுறுத்தப் படுவதுண்டு.
கோழிக்கும் சரி, நண்டுக்கும் சரி... பித்தத்தை அதிகரிக்கச் செய்யும் தன்மை உண்டு. அதாவது உடலுக்கு லேசான வெப்பத்தைக் கொடுப்பவை அவை. கபம் அதிகரித்து, தலை பாரமாக இருக்கும்போது கபத்தைக் குறைக்க அந்த வெப்பம் பயன்படும். சித்த மருத்துவத்தின் அடிப்படையில் சொல்லப்படுகிற அறிவுரைதான் இது. இன்னொரு பக்கம், இதுபோன்ற சிக்கன் சூப், நண்டு ரசம் போன்றவற்றில் சேர்க்கப்படும் மற்ற பொருள்களும் நோயை குணமாக்குவதில் முக்கியப் பங்காற்றுகின்றன.
மிளகு, சீரகம், திப்பிலி போன்ற பொருள்கள் சேர்ப்பதால், அந்த உணவின் மருத்துவ குணம் மேலும் அதிகரிக்கும். இந்தப் பொருள்களுக்கும் கபத்தை அறுக்கும் தன்மை உண்டு. இந்த உணவுகளை உட்கொண்ட உடனேயே கோழை விலகுவதை உணர முடியும். மூக்கடைப்பு சரியாவதை உணரலாம்.

தொண்டைக் கரகரப்பு ஏற்படும்போதும், குளிர்காலத்தில் உடல் சில்லென இருப்பதாக உணரும்போதும் முக்கியமாக இந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். பருவத்துக்கேற்ற உணவியலில் இவை முக்கிய இடம் பிடிக்கின்றன.

நண்டு ரசம் செய்யும்போது நண்டை சேர்த்து லேசாகக் கொதிக்கவைத்துக் குடிப்பதைவிட, அதை இடித்துச் சாறெடுத்து பிறகு சமைத்துச் சாப்பிடுவதுதான் சரியானது. அப்போதுதான் கபம் முழுமையாக வெளியேறும். இந்த எல்லா உணவுகளிலும் ஊட்டச்சத்துகளும் அபரிமிதமாக உள்ளதால் உடல்சோர்வும் விலகும். நோய்வாய்ப்பட்டவர்கள் மட்டுமன்றி, நோயிலிருந்து மீண்டவர்கள், உடல் களைப்பாக உணரும் நிலையில் இந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். உடல்நலமில்லாத நிலையில் இதுபோன்ற திரவ உணவுகளை எடுத்துக்கொள்வது உடனடி ஆற்றலையும் கொடுக்கும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.