Dooms Day Clock Explained : `89 விநாடிகளே...’ உலக அழிவுக்கு நெருக்கமாக இருக்கிறோமா?
Dooms Day Clock அல்லது இறுதிநாள் கடிகாரம் என்பது ஆண்டுக்கு ஒருமுறை பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் இணைந்து நேரத்தை நிர்ணயிக்கும் கடிகாரமாகும்.
இந்த கடிகாரத்தை 12 மணிக்கு நகர்த்தினால், அதாவது கடிகாரத்தில் இருக்கும் இரண்டு முள்களும், ஒரே கோட்டில் கொண்டு வரப்பட்டால், அது உலகின் இறுதிநாள் என்று பொருள். 12 மணியிலிருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறதோ, உலகம் அழிவிலிருந்து அவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பது பொருள்.
2025ம் ஆண்டுக்காக சமீபத்தில் அந்த கடிகாரம் நகர்த்தப்பட்டது. இப்போதைய நேரம் 12 மணிக்கு 89 விநாடிகள் மட்டுமே பின்னால் இருக்கிறது. உலகம் அழிவுக்கு அவ்வளவு நெருக்கமாக இருக்கிறதா? இதை நாம் சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டுமா? இந்த கடிகாரம் குறித்து கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.
Dooms Day Clock - டூம்ஸ் டே கடிகாரம்
அமெரிக்க நாட்டில், சிகாகோ மாகாணத்தைச் சேர்ந்த லாப நோக்கற்ற புல்லட் இன் ஆஃப் தி அடாமிக் சையின்டிஸ்ட்ஸ் (The Bulletin of the Atomic Scientists ) என்கிற அமைப்பு டூம்ஸ் டே கடிகாரத்தை ஒவ்வொரு ஆண்டுக் மாற்றியமைக்கும் பணியைச் செய்கிறது.
பல்வேறு அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள், அணுசக்தி தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள், காலநிலை மாற்ற விவகாரங்களில் ஆழ்ந்த அறிவு கொண்டவர்கள் இந்த கடிகாரத்தை மாற்றி அமைக்கும் குழுவில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இன்றைய குழுவில் 9 நோபல் பரிசு பெற்ற ஆலோசகர்கள் இடம்பெற்றுள்ளனர்.
உலக அரசியல் பிரச்னைகள், அணு ஆயுதப் போர் அல்லது அதற்கான வாய்ப்பு, நாடுகளுக்கு இடையிலான மோதல்கள், அதீத தொழில்நுட்ப வளர்ச்சி, காலநிலை மாற்றம் போன்ற பல்வேறு காரணங்கள் இந்த அழிவுக்கு வித்திடலாம். இதில் பல காரணிகள் மனித கட்டுப்பாட்டில் உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் உலகப்போரில் லட்சக்கணக்கான மக்கள் அணு ஆயுதங்களால் உயிரிழந்த குற்ற உணர்ச்சி, அணு விஞ்ஞானிகளை இதுகுறித்து நடவடிக்கை எடுக்கத் தள்ளியது. ஓப்பன்ஹெய்மெர், ஆல்பர்ட் ஐன்ஸ்டின் போன்ற புகழ்பெற்ற அணு ஆயுத விஞ்ஞானிகள் The Bulletin of the Atomic Scientists என்ற அமைப்பைத் தொடங்க முன்வந்தனர்.
1947ம் ஆண்டு பனிப்போர் காலத்தில், மனித காரணங்களாலேயே உலகம் அழிவதற்கான வாய்ப்பு இருப்பதை உணர்த்தவே ஆணு விஞ்ஞானிகள் முன்வந்து இதை நிறுவினர். இது ஒரு எச்சரிக்கை உருவகம். மார்டில் லாங்ஸ்டோர்ஃப் என்ற கலைஞர் இந்த கடிகாரத்தை வடிவமைத்தார்.
காலப்போக்கில் அணு ஆயுதங்களைக் கடந்து, காலநிலை மாற்றம் மற்றும் பிற தொழில்நுட்பங்களின் வளர்ச்சியும் மனித இருப்புக்கு அச்சுறுத்தலாக மாறுவது குறித்து The Bulletin of the Atomic Scientists அமைப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தத் தொடங்கியது.
1947ல் அணு ஆயுத போர் அபாயம் இருந்ததால் முதன்முறை தொடங்கப்பட்டபோது 12 மணிக்கு 7 நிமிடங்கள் பின்னதாக கடிகாரம் அமைக்கப்பட்டிருந்தது.
நாம் அழிவுக்கு நெருக்கமாக இருக்க என்ன காரணம்?
இன்று டூம்ஸ் டே கடிகாரம் அழிவுக்கு மிகவும் நெருக்கமாக வைக்கப்பட்டதற்கு முக்கிய காரணமாக அதிபர் ட்ரம்ப்பின் வருகையும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. அவர் காலநிலை மாற்றம், உலக வெப்பநிலை அதிகரித்தல் போன்றவற்றை கண்டுகொள்ளாமல் பல்வேறு ஆணைகளில் கையெழுத்திட்டுள்ளார். உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து வெளியேறி, பல நாடுகளுக்கு வழங்கப்பட்ட சுகாதார உதவிகளை நிறுத்தியுள்ளார்.
2022ம் ஆண்டு 12 மணிக்கு 90 வினாடிகள் இருந்த நிலையில், 2025ல் 89 வினாடி இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு வினாடி மாற்றத்தை உலக நாடுகள் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என அணு விஞ்ஞானிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இன்றைய டூம்ஸ் டே கடிகாரத்தின் நிலைக்கு செயற்கை நுண்ணறிவின் அதீத வளர்ச்சி, காலநிலை சிக்கல்கள், உயிரியல் ஆபத்துகள், அணு ஆயுதங்கள் போன்றவை முக்கிய பிரச்னையாக முன் வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளே உலக அழிவுக்கு அருகில் இருப்பதற்கான முக்கிய காரணம் என்றும் கூறியுள்ளனர்.
இதுவரையில் அதிகபட்சமாக 12 மணிக்கு 17 நிமிடங்கள் தொலைவில் டூம்ஸ் டே கடிகாரம் வைக்கப்பட்டிருக்கிறது. 1991ம் ஆண்டு பனிப்போர் முடிந்து வல்லரசு நாடுகள் ஆயுத குறைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதனால் இது நடந்தது.
டூம்ஸ் டே கடிகாரத்தை பின்னோக்கி செலுத்துவதற்கு மானிட குலம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அறிவியலாளர்களின் வேண்டுகோளாக உள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs