INDvENG : `சதமடித்த ரோஹித்; சம்பவம் செய்த ஜடேஜா!' - இந்திய அணி தொடரை வென்ற காரணங்கள்
கட்டாக்கில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஓடிஐ போட்டியை வென்றதன் மூலம் இந்தத் தொடரையும் இந்திய அணி வென்றிருக்கிறது. இங்கிலாந்து அணி 300+ டார்கெட்டைதான் இந்திய அணிக்கு நிர்ணயித்திருந்தது. அப்படியிருந்தும் இந்திய அணி எளிதாக வென்றிருக்கிறது. ஜடேஜாவின் அற்புதமான பௌலிங், ரோஹித்தின் கம்பேக் சதம் என போட்டியின் முக்கியமான தருணங்களைப் பற்றி இங்கே.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-09/xd9rpd0w/AP25040283483307.jpg)
ஜாஸ் பட்லர்தான் டாஸை வென்றிருந்தார். முதலில் பேட்டிங் செய்யப்போவதாக கூறினார். விராட் கோலி காயத்திலிருந்து குணமடைந்து விட்டதால் மீண்டும் லெவனுக்குள் வந்திருந்தார். அவருக்காக ஜெய்ஸ்வாலை பென்ச்சில் உட்கார வைத்திருந்தார்கள். வருண் சக்கரவர்த்தியும் லெவனில் இடம்பிடித்திருந்தார்.
இங்கிலாந்து அணி 50 ஓவர்களை முழுமையாக நிறைவு செய்வதற்கு முன்பே 304 ரன்களில் ஆட்டமிழந்துவிட்டது. இங்கிலாந்து அணி ஆடிய சிறப்பான ஆட்டத்துக்கு நிச்சயமாக அவர்களால் 350+ ரன்களை எடுத்திருக்க முடியும். டாப் ஆர்டர் முழுக்க நன்றாக ஆடியிருந்தார்கள். கணிசமான பார்டனர்ஷிப்களை அமைத்திருந்தார்கள். முதல் விக்கெட்டுக்கு பென் டக்கெட்டும் சால்ட்டும் இணைந்து 81 ரன்களை சேர்த்திருந்தார்கள். மூன்றாவது விக்கெட்டுக்கு ஹாரி ப்ரூக்கும் ரூட்டும் சேர்ந்து 66 ரன்கள்.
பார்ட்னர்ஷிப் அமைத்தும் பலனில்லை:
அடுத்த விக்கெட்டுக்கு பட்லரும் ரூட்டும் சேர்ந்து 51 ரன்கள். எல்லாமே நல்ல பார்ட்னர்ஷிப்கள். பேட்டர்கள் நன்றாக செட் ஆகியிருந்தார்கள். அதைப் பயன்படுத்தி பெரிய இன்னிங்ஸ்களை யாருமே ஆடவில்லை. எதோ ஒரு வீரர் பெரிய சதத்தையோ இல்லை எதோ ஒரு பார்ட்னர்ஷிப் இன்னும் பெரிதாகவோ அமைந்திருந்தால் போட்டி இங்கிலாந்து பக்கமாகத் திரும்பியிருக்கும். தவறவிட்டுவிட்டார்கள்.
ஷமி, ஹர்ஷித் ராணா, ஹர்திக் பாண்ட்யா என மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் வீசியும் பவர்ப்ளேயில் இந்திய அணியால் விக்கெட் எடுக்க முடியவில்லை. ஸ்பின்னர்கள் அறிமுகமானவுடன் தான் விக்கெட் கிடைத்தது. வருண் சக்கரவர்த்திதான் முதல் விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார். அவருக்கும் ஓடிஐ யில் முதல் விக்கெட் இது. சால்ட் ஒரு பெரிய ஷாட்டுக்கு முயற்சிசெய்து அவுட் ஆனார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-09/i5va2i9u/AP25040339889362.jpg)
`வாவ்' ஜடேஜா:
'ஜடேஜாவை நாம் இன்னும் அதிகமாகக் கொண்டாட வேண்டும்.' என கடந்த போட்டிக்குப் பிறகு அஷ்வின் பேசியிருந்தார். அது உண்மைதான். இந்தப் போட்டியிலும் கச்சிதமாக வீசி சில முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்திக் கொடுத்திருந்தார். அரைசதம் கடந்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த பென் டக்கெட் மற்றும் ரூட்டின் விக்கெட்டுகளை டைட்டாக வீசி அவர்தான் வீழ்த்திக் கொடுத்திருந்தார். இருவரில் ஒருவர் நின்று சதம் அடித்திருந்தாலும் அந்த 350 என்கிற இலக்கை இங்கிலாந்து எட்டியிருக்கும். ஜடேஜா அதை நடக்கவிடாமல் தடுத்தார். இவர்கள் போக மூன்று விக்கெட்டுகளை இங்கிலாந்து ரன் அவுட் வழியாகவும் இழந்திருந்தது. லிவிங்ஸ்டன், அடில் ரஷீத், மார்க் வுட் என மூவர் ரன் அவுட் ஆகியிருந்தனர். இதில் லிவிங்ஸ்டனின் ரன் அவுட் முக்கியமானது. கட்டாயம் இன்னும் 50 ரன்களை கூடுதலாக அடித்திருக்கலாம் என்றாலும் இங்கிலாந்து அணி எடுத்ததும் நல்ல ஸ்கோரே.
இந்திய அணிக்கு 305 ரன்கள் டார்கெட். ரோஹித்தும் கில்லும் ஓப்பனிங் இறங்கினார்கள். இருவரும் மிகச்சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார்கள். ரோஹித் நீண்ட காலம் கழித்து சிறப்பான ஆட்டத்தை ஆடியிருந்தார்.
கோலி இன்; ஜெய்ஸ்வால் அவுட்
ரோஹித் அவர் மீதான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் ஆடினார். அதாவது, பழைய ரோஹித்தாக ஆடினார். 2023 ஓடிஐ உலகக்கோப்பையில் ஒரு ஆட்டம் ஆடியிருப்பாரே. பவர்ப்ளேயில் அடித்து வெளுத்து அணிக்கு அட்டகாசமான மொமண்டமை கொடுப்பாரே. அப்படியொரு ஆட்டம். அட்கின்சன் வீசிய இரண்டாவது ஓவரிலேயே ஒரு பவுண்டரியையும் சிக்சரையும் அடித்திருந்தார். அந்த சிக்சர் ஒரு ப்ளிக். மிட் விக்கெட்டில் கிட்டத்தட்ட 70 மீட்டரை கடந்த சிக்சர். 'இது ஒரு அற்புதமான ஷாட்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-09/36tevhjf/AP25040537948645.jpg)
ரோஹித் நம்பிக்கையாக தெரிகிறார். கடந்த போட்டிகளில் இந்த ஷாட்டுக்கு முயன்றுதான் பல முற்சி அவுட் ஆகியிருக்கிறார். இன்று அதை மிகச்சிறப்பாக ஆடியிருக்கிறார்.' என கவாஸ்கர் வர்ணனையில் விதந்தோதத் தொடங்கினார். அந்த ஓவர் மட்டுமில்லை. அடுத்தடுத்த ஓவர்களிலுமே க்ளீன் ஹிட்டாக சிக்சர்களையும் பவுண்டரிகளையும் பறக்கவிட்டார். கடந்த போட்டியில் ரோஹித்தை வீழ்த்திய மஹ்மூத்தின் ஓவரிலும் சிக்சர்களை பறக்கவிட்டார். கவரில் ஒன்று லாங் ஆபில் ஒன்று என அவர் ஓவர்களில் அடித்த இரண்டு சிக்சர்களுமே அட்டகாசம். இடையில் சில நிமிடங்கள் மின் விளக்குகளின் பிரச்னையால் ஆட்டம் தடைபட்டது. அது ரோஹித்தின் மொமண்டமை கெடுத்துவிடுமோ என தோன்றியது. அப்படி எதுவும் நடக்கவில்லை. இடைவேளைக்கு பிறகும் ரோஹித் கலக்கினார். அரைசதத்தைக் கடந்தார்.
இதுதான் ரோஹித்; இதுதான் ஹிட்மேன்!
ஒரு கட்டத்துக்கு பிறகு ரோஹித்துக்கு ஷார்ட் பிட்ச் பந்துகளாக வீசி ஆட்டமிழக்கச் செய்ய முற்பட்டனர். அட்கின்சன் ஒரு ஓவர் முழுவதுமாக ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களாக வீசிக்கொண்டே இருந்தார். டீப் பைன் லெக்கில் பீல்டரும் இருந்தார். ரோஹித் அசரவில்லை. பேக்வர்ட் ஸ்கொயரிலும் பைன் லெகிலும் பவுண்டரியையும் சிக்சரையும் அடித்தார். இதுதான் ரோஹித். இதுதான் ஹிட்மேன். அடீல் ரஷீத்தான் இந்திய பேட்டர்களைக் கடுமையாக திணற வைக்கிறார். ஆனால், ரோஹித் அவரின் ஓவரிலும் சிறப்பாக ஸ்வீப் ஷாட்களை ஆடினார். அவர் ஸ்லிப்பை வைத்து அட்டாக் செய்கையில்தான் லாங் ஆபில் சிக்சர் அடித்து சதத்தை நிறைவு செய்தார். ரோஹித்தின் 32 வது ஓடிஐ சதம் இது. 119 ரன்களை எடுத்திருந்த ரோஹித் லிவிங்ஸ்டனின் பந்தில் ஆட்டமிழந்தார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-09/ns1iuuhn/20250209192734.jpg)
கலக்கிய ஸ்ரேயாஸ், அக்சர்
ஆரம்பத்தில் ரோஹித்துக்கு பக்கபலமாக ஆடிய கில்லும் பக்குவமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். கடந்த போட்டியை போலவே செகண்ட் பிடில் ஆடி அரைசதத்தையும் கடந்தார். விராட் கோலியால் பெரிதாக ஆட முடியவில்லை. 5 ரன்களில் அடில் ரஷீத்தின் பந்தில் ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் ஐயரும் சிறப்பாக 44 ரன்களை எடுத்தார். குறிப்பாக, கடந்த போட்டியை போல இந்த போட்டியிலும் ஷார்ட் பிட்ச் பந்துகளை நன்றாக ஆடி பவுண்டரிக்களாக்கினார். டீப் தேர்டு மேன், டீப் பைன் லெக், பேக்வர்ட் ஸ்கொயர் என பொறி வைத்து ஷார்ட் பிட்ச் பந்தாக வீசிய போதும் அசராமல் அட்டாக் செய்தார். தன்னுடைய பலவீனத்திலிருந்து மீண்டு வந்திருக்கிறார். ரன் அவுட்டில் சிக்காமல் இருந்திருந்தால் அரைசதத்தை கடந்திருப்பார். கடைசிக்கட்டத்தில் இந்திய அணி வேகமாக விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் அழுத்தம் ஏறவில்லை. 5.3 ஓவர்களை மீதம் வைத்து இந்திய அணி டார்கெட்டை எட்டியது. 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அக்சர் படேல் ஆட்டமிழக்காமல் 41 ரன்களை அடித்திருந்தார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-09/t7z3xfal/AP25040541057468.jpg)
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடரை இந்திய அணி வென்றிருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பாக ஒரு சிறப்பான வெற்றி.
இன்றைய ஆட்டத்தின் திருப்புமுனையாக நீங்கள் நினைக்கும் தருணம் எது கமென்ட்டில் குறிப்பிடவும்