நியூயார்க்கில் வலம் வந்த விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா - வைரல் வீடியோவின் ப...
Mumbai Rain: தொடரும் கனமழை; வெள்ளம் சூழ்ந்த நகரம், முடங்கிய இயல்பு வாழ்க்கை - மும்பை வெள்ள நிலவரம்
மும்பை கனமழை
மும்பையில் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து தொடர்ந்து விடாது மழை பெய்துகொண்டே இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை வரை மிதமாக பெய்த இம்மழை திங்கள் கிழமை காலையில் இருந்து கடுமையாக பெய்ய ஆரம்பித்தது.
தொடர்ந்து விடாமல் பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது. இன்றும் காலையில் இருந்தே கனமழை பெய்து வருகிறது.
அதிகமானோர் அலுவலகத்திற்கு வேலைக்கு செல்வதை தவிர்த்து வீட்டில் முடங்கியுள்ளனர். மும்பை, தானே, நவிமும்பை, பால்கர், மீராபயந்தர் மாநகராட்சிகளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நேற்றும், இன்றும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மும்பை பல்கலைக்கழகம் தேர்வுகளை ஒத்தி வைத்திருக்கிறது.
திங்கள், செவ்வாய் கிழமைகளில் கனமழை பெய்யும் என்று கூறி வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது.
கனமழையால் தென்மும்பையில் உள்ள நெப்பன்சி ரோட்டில் சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
காஞ்சூர்மார்க் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மும்பையில் ஓடும் மித்தி ஆற்று வெள்ளத்தில் ஒருவர் அடித்துச்செல்லப்பட்டார்.
நேற்று காலையில் இருந்து 8 மணி நேரத்தில் செம்பூர், தாதர் பகுதியில் அதிக பட்சமாக 100 மிமீ அளவுக்கு மழை பெய்தது.

வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகள்
கோரேகாவ், லோகண்ட்வாலா, அந்தேரியில் உள்ள வீர தேசாய் சாலை, மாட்டுங்கா, செம்பூர், கார் ரோடு, தாதர் கிழக்கு மற்றும் குர்லாவின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
மும்பை மாநகராட்சி, காவல்துறை, தீயணைப்பு துறை, பேரிடர் மீட்பு படை மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்தது.
கல்யாண் பகுதியில் ரயில்வே போலீஸ் நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் ஆவணங்களை அதிகாரிகள் முதல் மாடிக்கு கொண்டு சென்றனர்.
மாநகராட்சி ஊழியர்கள் 24 மணி நேரமும் மும்பை முழுக்க பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மும்பையில் பெரும்பாலான சாலைகள் தண்ணீரில் மூழ்கி காணப்பட்டதாக வாகன போக்குவரத்து அடியோடு முடங்கியது.
விமான நிலையத்தில் குறைவான வெளிச்சம் காரணமாக 10 விமானங்கள் தரையிறங்க முடியவில்லை.
போக்குவரத்து முடக்கம்
புறநகர் ரயில் சேவையும் மிகவும் தாமதமாக இருந்தது. இதனால் நேற்று மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பியவர்கள் பலமணி நேரம் ரயிலில் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
குர்லா, கோவண்டி, திலக் நகர், செம்பூர் ரயில் தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியது. கிங் சர்க்கிள், தாதர் கிங்மாதா பகுதியில் வழக்கம்போல் தண்ணீர் தேங்கி வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தில் தண்ணீர் தேங்கும் என்பதால் அதனை உடனுக்குடன் வெளியேற்ற ரூ.156 கோடியில் பூமிக்கு அடியில் தண்ணீர் டேங்க் கட்டப்பட்டு இருந்தது.
அந்த தண்ணீர் டேங்க் கட்டப்பட்ட பிறகும் மழை நீரை கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் கழிநீர் கால்வாய்கள் அனைத்தும் நிரம்பி சாலைகள், தெருக்களில் தண்ணீர் புகுந்தது. அந்தேரி சுரங்கபாதை காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை மூடப்பட்டு இருந்தது.
வெள்ள பாதிப்பு
சாலை முழுக்க தண்ணீர் தேங்கியதால் 51 மாநகராட்சி பஸ்கள் வேறு வழித்தடத்தில் திருப்பிவிடப்பட்டது. செயலி மூலம் இயங்கும் டாக்சிகள் பெரும்பாலும் செயல்பாட்டில் இல்லை. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.
இது தவிர வழக்கமான டாக்சி மற்றும் ஆட்டோக்காரர்களும் மழை காரணமாக வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர். மும்பையில் அதிகமான இடங்களில் மின்விநியோகமும் பாதிக்கப்பட்டது. கல்வா பகுதி மழையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. மழை வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட மக்கள் படகு மூலம் மீட்கப்பட்டனர்.
அங்குள்ள மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறார்கள் மழை வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். அவர்கள் படகு மூலம் மீட்கப்பட்டனர். மாட்டுங்கா காந்தி மார்க்கெட் பகுதியில் 3 அடி உயரத்திற்கு சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
மும்பை உயர் நீதிமன்றத்திற்கு அதிகமான வழக்கறிஞர்களால் குறிப்பிட்ட நேரத்திற்கு வரமுடியாத நிலை ஏற்பட்டது. மும்பையில் கடந்த மூன்று நாள்களில் 500 மிமீ அளவுக்கு மழை பெய்தது.
மும்பை அருகில் உள்ள நவிமும்பை, தானே போன்ற பகுதியிலும் கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழைக்கு நாண்டெட் மாவட்டத்தில் 4 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். யவத்மால், பீட், நாண்டெட் பகுதியில் கனமழையால் 4 லட்சம் ஹெக்டேர் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.