PBKS Vs RR: "எல்லா நாள்களும் ஒரேமாதிரியாக இருக்கப் போவதில்லை" - ஆட்டநாயகன் ஆர்ச்சர்
ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று (ஏப்ரல் 5) நடைபெற்ற ஐபிஎல் 50 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, ஜெய்ஸ்வால், ரியான் பராக், கேப்டன் சஞ்சு சாம்சன் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் 205 ரன்கள் குவித்தது.

அதையடுத்து, களமிறங்கிய பஞ்சாப் அணி, ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டைப் பறிகொடுத்தது. நடுவில், நேஹல் வதேரா - மேக்ஸ்வெல் கூட்டணி சற்று நம்பிக்கையளித்தாலும் ராஜஸ்தானின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல், 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் மட்டும் அடித்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆட்ட நாயகன் விருதை, ராஜஸ்தான் தரப்பில் அபாரமாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகள் வீழ்த்திய ஆர்ச்சர் வென்றார்.

விருது பெற்ற பிறகு பேசிய ஆர்ச்சர், ``வெற்றிக்கு பங்களிப்பதில் மகிழ்ச்சி. இது போன்ற நாள்களில், நல்ல விஷயங்களை அனுபவிக்கிறோம், தவறுகளை முன்னேற்றத்துக்காக ஏற்றுக் கொள்கிறோம். எல்லா நாள்களும் ஒரேமாதிரியாக இருக்கப் போவதில்லை. நம்மைப் போலவே எல்லோருமே கடினமாகப் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். ஆனால், சில சூழ்நிலைகளில் நாம் அதிர்ஷ்டசாலியாக இருக்கிறோம்" என்று கூறினார்.