Rashmika: ``இந்தப் புகைப்படம் மட்டும்தான் என்னிடம் இருக்கிறது'' - தனுஷ் குறித்து ரஷ்மிகா நெகிழ்ச்சி
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த ஜூன் 20-ம் தேதி ரிலீஸ் ஆன குபேரா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக உருவாகி மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் டப் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக வெளியாகியுள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் நடிகை ரஷ்மிகா மந்தனா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் தனுஷ் குறித்து நீண்டப் பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.
அதில், ``தனுஷ் சார் உங்களுடன் நான் முழுப் படம் நடித்திருந்தாலும், இதுதான் நானும் நீங்களும் சேர்ந்து எடுத்துக்கொண்ட முதல் புகைப்படம். நீங்கள் ஒரு அற்புதமான மனிதர். ஒவ்வொரு நாளும் மிகவும் கடினமாக உழைத்ததற்கு மிக்க நன்றி (நாம் வெவ்வேறு நகரங்களில், வெவ்வேறு வேலைகளில் இருக்கும்போது ஓய்வு எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றிப் பேசியிருக்கிறோம். ஆனால் அந்த ஓய்வை நம்மால் பெறமுடியாது என்பதையும் அறிவோம்)
மேலும் குபேராவில் மட்டுமல்ல, எல்லா படத்திலும் அற்புதமான நடிப்பை வழங்கியதற்கு நன்றி. என்னிடம் மட்டுமல்ல உங்களுடன் பழகிய அனைவருடனும் அன்பாக இருந்தீர்கள். படப்பிடிப்பு தளத்தில் நீங்கள் எனக்கு எத்தனை லட்டுகள் கொடுத்தீர்கள் என்பது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. எப்போதும் அதை மறக்கமாட்டேன்.
படப்பிடிப்பில் தமிழ் வரிகளை கற்றுக்கொடுத்த விதம், எப்படி நடிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு, அதை சரியாக செய்துவிட்டால், நன்றாக இருந்தது என்ற பாராட்டு என அனைத்தும் அற்புதமான அனுபவம். இது அனைத்தும் சாதாரண விஷயங்களாக உங்களுக்குத் தோன்றலாம். இப்போது மட்டுமல்ல எப்போதும் உங்களுக்கு எல்லா நல்ல விஷயங்களும் கிடைக்க வாழ்த்துகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.