உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
Relationship: கணவன் - மனைவி உறவை இணையம் பிரிக்கிறதா? எக்ஸ்பர்ட் சொல்லும் தீர்வு!
இன்றைக்கு, தங்கள் இணையுடன் நேரம் செலவிடும் நபர்களின் எண்ணிக்கையைவிட இணையத்தில் மூழ்கிக் கிடப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். டிஜிட்டல் உலகம் கணவன்-மனைவிக்கு இடையேயான தாம்பத்திய வாழ்க்கையை எந்தெந்த விதங்களில் எல்லாம் பாதிக்கின்றன? அவற்றிலிருந்து விடுபடுவது எப்படி? மனநல மருத்துவர் டி.வி.அசோகனிடம் பேசினோம்.

"ஒருவர் அலுவலக வேலைகள் போன்ற அத்தியாவசிய காரணங்களின்றி அதிக நேரம், அதாவது, ஒரு வாரத்திற்கு 48 மணி நேரம் இணையத்தில் செலவிட்டார் என்றால் அவர் இணையத்திற்கு அடிமையாகிக்கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். இதை `பிஹேவியர் அடிக்ஷன்' என்பார்கள். ஒருவர் அநாவசியமாக அதிக நேரம் இணையத்தில் செலவிடும்போது அது அவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதிக்க அதிகம் வாய்ப்புள்ளது.
மேலும் இணையம் வந்தபோது இருந்த நிலைக்கும், தற்போதைய நிலைக்கும் நிறையவே வித்தியாசங்கள் உள்ளன. நாம் ஒரு சாலையில் நடந்துசென்று கொண்டிருக்கும்போது ஓர் ஓரத்தில் சாக்கடை கிடந்தால் அதைத் தாண்டி எளிதாகச் சென்றுவிடலாம். இதுதான் இணையத்தின் ஆரம்ப நிலை. எல்லாவற்றிலும் நெகட்டிவ் விஷயங்கள் இருப்பதுபோல இணையத்திலும் இருந்தன. ஆனால், குறைவாக இருந்தன. அதனால் எளிதாகக் கடந்துவிட்டோம். தற்போது நாம் சென்றுகொண்டிருக்கும் இணையம் என்னும் சாலையில் திரும்பிய எல்லாப் பக்கங்களில் எல்லாம் சாக்கடைதான். அதாவது நம் வாழ்க்கையையே திசைமாற்றக் கூடிய பல விஷயங்கள் தற்போது இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. இவற்றைக் கடப்பது என்பது அவ்வளவு எளிதல்ல.

கணவன்-மனைவி தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்து நேருக்கு நேர் பேசிக்கொள்வதைவிட மொபைலிலோ அல்லது இணையதளத்தின் வழியாகவோ பேசிக்கொள்வதுதான் அதிகம். இது அவர்களின் அன்னியோன்னியத்தைப் பாதிக்கும். தம்பதி ஒருவரை மற்றொருவர் நேரடியாகப் பார்த்துப் பேசிக்கொள்ளும்போது உருவாகும் உணர்ச்சிகள் எதுவும் போனில் பேசிக்கொள்வதாலோ அல்லது வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜை ஃபார்வேர்டு செய்வதாலோ ஏற்படப்போவதில்லை.
குறிப்பாக, இந்த டிஜிட்டல் உலகம் தம்பதிகளின் தாம்பத்ய வாழ்க்கையில் ஏற்படுத்தும் விரிசல்கள் ஏராளம். டிஜிட்டல் உலகம் வழியாக இல்லற வாழ்க்கையைப் பாதிக்கும் முதல் காரணி, ஆபாசப் படங்கள். கணவனோ மனைவியோ இணையத்தில் கொட்டிக்கிடக்கும் ஆபாசப் படங்களைப் பார்த்துவிட்டு தங்கள் நிஜ வாழ்க்கையிலும் அதுபோன்ற ஒரு தாம்பத்ய உறவை எதிர்பார்த்து அது கிடைக்காதபோது விரக்தியடைகின்றனர்.
வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்றவற்றில் காதல் ஸ்டேட்டஸ் போட்டு தங்கள் இணையரின் மீதான அன்பை வெளிப்படுத்துவதைவிட, நேரில் பார்த்து சண்டைபோட்டுக்கொள்வதுகூட இணையருக்குள் ஒரு நல்ல நெருக்கத்தை ஏற்படுத்தும்.
ஆபாசப்படங்கள் என்பவை வியாபாரத்திற்காகச் செயற்கையாக சித்திரிக்கப்பட்டவை. நிஜ வாழ்க்கைக்கு ஒத்துவராத இவை பார்ப்பவர்களின் மனதில் ஒரு வக்கிரத்தன்மையை உருவாக்குவதால் அவர்களின் தாம்பத்ய வாழ்க்கை கேள்விக்குறியாகிறது. ஒருவர் இதுபோன்ற ஆபாசப்படங்களைப் பார்த்துவிட்டு வெறும் காமத்தோடு மட்டும் தன் இணையை நெருங்கும்போது அந்தத் தாம்பத்ய உறவு வலுவாக இருக்காது. சிலர் இந்த ஆபாசப்படங்களில் காட்டப்படும் காட்சிகளைப்போல நிஜ தாம்பத்யத்திலும் எதிர்பார்க்கும்போது அது அவரின் துணைக்குப் பிடிக்காமல் இருந்தாலோ, அருவருப்பை ஏற்படுத்தினாலோ அவர்களின் தாம்பத்ய வாழ்க்கையில் விரிசல் ஏற்படலாம்.
மேலும் இதுபோன்ற காட்சிகளைப் பார்த்துவிட்டு தங்கள் துணைக்கு விருப்பமில்லாத நேரத்தில் தாம்பத்ய உறவுக்கு வற்புறுத்துவதும் இல்லற வாழ்க்கையைப் பாதிக்கும். இந்த ஆபாசப் படங்களைப் பார்த்துவிட்டு தங்களால் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடவே முடியாதோ என்று பயந்தும், குழம்பியும் உள்ளவர்கள் ஏராளம். இதுபோல பல்வேறு விதங்களில் கணவன்-மனைவிக்கு இடையேயான தாம்பத்ய வாழ்க்கையைச் சிதைத்துக்கொண்டிருக்கிறது டிஜிட்டல் உலகம்.
* இணையத்தில் இருக்கும் ஆபாசப் படங்கள் எல்லாம் சித்திரிக்கப்பட்டவையே. இதில் நடிப்பவர்கள் இதற்கென பிரத்யேகமாக தங்கள் உடல்களைத் தயார்செய்து வைத்திருப்பவர்கள். எனவே, இந்த ஆபாசப் படங்களையும் நிஜ தாம்பத்ய வாழ்க்கையையும் ஒப்பிட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது.
* வாழ்க்கைத் துணையுடன் பேசிக்கொண்டிருக்கும்போது வாட்ஸ்அப், இன்ஸ்டா ரீல்ஸ் பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிருங்கள்.
* தினமும் அலுவலக வேலை, வீட்டு வேலைகளுக்கு மத்தியில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மனம்விட்டுப் பேச சிறிது நேரம் ஒதுக்குங்கள்.
* விடுமுறை தினங்களில் உங்கள் துணையுடன் கடற்கரை, மலைப்பிரதேசம் போன்ற இயற்கை சார்ந்த இடங்களுக்குச் சென்று வாருங்கள். காதலுடன் கூடிய காமமே ஆரோக்கியமானது என்பதை எப்போதும் நினைவில்கொள்ளுங்கள்'' என்றார் மனநல மருத்துவர் டி.வி.அசோகன்.