Relationship: உறவுகளை மேம்படுத்துமா சின்னச்சின்ன தொடுதல்கள்?
காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால் சின்ன தகரம் கூட தங்கம் தானே' - தொடுதலின் மகத்துவத்தை மிக அழகாகச் சொல்லும் பாடல் வரிகள்.
உண்மையில் அன்பானவர்களின் கண்ணியமான சின்ன தொடுதலுக்கு எதையும் மாற்றக்கூடிய சக்தி உள்ளது. இது காதலில் மட்டும் இல்லை. பெற்றோர்கள், குழந்தைகள், சகோதரர்கள், நண்பர்கள் என யார் மீதும் நமக்குள்ள அதீத அன்பை வெளிப்படுத்த வார்த்தைகளைவிட சின்னச் சின்ன தொடுதல்களும் அரவணைப்புகளுமே அதிகம் உதவுகின்றன.
'கட்டிப்பிடி வைத்தியமும்' இந்தத் தொடுதல் ட்ரிக்தான். தொடுதல் எந்த வகையிலெல்லாம் உறவுகளை மேம்படுத்தும் என்பது பற்றி உளவியல் ஆலோசகர் வசந்தி பாபுவிடம் கேட்டோம்.
அன்பான தொடுதல்களும் அரவணைப்பும் தரும், நம்பிக்கையையும் ஆறுதலையும் வேறு எதுவும் தந்துவிட முடியாது. குறிப்பாக, குழந்தைகளிடம் பெற்றவர்கள் தொட்டுக் காட்டும் அரவணைப்பு இன்றியமையாதது.
ஒரு குழந்தை பிறந்தவுடனேயே தாயிடமிருந்து அதற்கு இந்தத் தொடுதலும் அரவணைப்பும் கிடைக்க வேண்டும். பாலூட்டுவது, மார்புடன் அணைத்துக்கொள்வது போன்றவையெல்லாம் பிறந்த குழந்தைகளை அரவணைக்கும் சிறந்த வழிகள். அவர்கள் வளரும்போதும் பதின்பருவத்தில் இருக்கும்போதும் இந்த அரவணைப்பு முக்கியம்.
இதுபோல் சின்னச் சின்ன அன்புக்காகத்தான் அவர்கள் ஏங்கிக் கொண்டிருப்பார்கள். அது பெற்றோர்களிடமிருந்தே கிடைக்கும்போது அவர்கள் வழி தவறிச் செல்வதற்கான வாய்ப்புகள் குறைவு.
எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வெற்றி பெறும் நேரங்களில் தட்டிக் கொடுத்தும் தோல்வியடையும் நேரங்களில் அரவணைத்தும் பழகி வந்தால் பெற்றோர்-பிள்ளைகளுக்கு இடையே அன்பு, பாசம் என்பதைத் தாண்டி ஒரு சிறந்த நட்பும் கட்டமைக்கப்படும்.

அன்பின் மொழிதான் தொடுதல். கணவன்-மனைவி என்று வரும்போது அவர்களின் தாம்பத்ய உறவைத் தவிர்த்து அவ்வப்போது ஏற்படும் சின்னச் சின்ன தொடுதல்களும் தோள் சாய்தலும் கைகோத்தலும், கால் வருடல்களும் அவர்களின் காதலை அதிகப்படுத்தும். இருவரின் புரிந்துணர்வையும் மேம்படுத்தும்.
தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கணவர் சோர்ந்திருக்கும்போது மனைவியின் ஒரு சின்ன, அழுத்தமான கைப்பற்றுதல் தரும் ஆறுதலை வேறு எந்தப் பொருளாலும் தந்துவிட முடியாது. அதுபோல் மனைவிக்கு கணவனின் நெஞ்சோடு சேர்த்த அணைப்புக்கும் வருடல்களுக்கும் இணையாக இந்த உலகத்தையே கொடுத்தாலும் ஈடாகாது. எனவே, கணவன்-மனைவி உறவை வலுப்படுத்த அவ்வப்போது நிகழும் சின்னச் சின்ன தொடுதல்கள் அவசியமான ஒன்று என்பதை தம்பதியர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

காதலில் தொடுதல் என்பது அந்தக் காதலை வலுவாக்கும் காரணிகளில் ஒன்று. காதலின் தொடக்கத்தில் இருவருக்குமே கைகள் கோப்பது, தோளில் சாய்வது போன்ற தொடுதல்களுக்கு தயக்கம் இருக்கத்தான் செய்யும். ஆனால், அதையும் தாண்டி எதார்த்தமாக விரல்படும்போதோ, நடந்து செல்லும்போது தோள்கள் உரசும்போதோ உடலில் பல ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாயும், வயிற்றில் பட்டாம்பூச்சிகள் அடித்துக் கொள்ளும். அப்போதெல்லாம் காதலர்கள் சிறகுகள் இல்லாமலே வானத்தில் பறப்பார்கள்! காதலில் நடக்கும் கண்ணியமான தொடுதல்கள் காதலர்கள் இருவருக்குமிடையே ஒருநம்பிக்கையையும் பாதுகாப்பு உணர்வையும் தங்கள் காதலைத் திருமணம் நோக்கி நகர்த்திச் செல்ல ஒரு தூண்டுதலையும் தரும்.
நெருங்கிய நண்பர்களிடம் பெரும்பாலும் இந்தத் தொடுதல் கலாசாரத்தை அதிகமாகப் பார்க்கலாம். இதில் ஆண், பெண் பாலின பேதம் இருக்காது. எந்த வன்மமும் இருக்காது. நீ என்னுடைய தோழன், தோழி என்ற உரிமை கொண்டாடுதலே அதிகம் இருக்கும். தோள்மீது கை போட்டுக்கொண்டு போட்டோ எடுத்துக்கொள்ளவது, கைகோத்துக்கொண்டு ஒன்றாகச் சுற்றுவதெல்லாம் இந்த மனநிலைதான். இது மனதுக்கு ஒருவிதப் பாதுகாப்பையும் சந்தோஷத்தையும் தரும். இதனால்தான் எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும் நண்பர்களிடம் எளிதாகப் பகிர்ந்துகொள்ள முடிகிறது.
மனம் உடைந்து இனி வாழவே முடியாது என்று கண்ணீர்விட்டுக் கொண்டிருப்பவர்களிடம் எவ்வளவு அறிவுரை சொன்னாலும் வேலைக்காகாது; கேட்க மாட்டார்கள். அதே நேரத்தில் எதுவும் செல்லாமல் நாம் தரும் நம்பிக்கையான அணைப்போ, தலை வருடலோ அவர்களின் கண்ணீரை நிறுத்திவிடும். இதுதான் வார்த்தைகளுக்கும் உணர்வுகளுக்கும் உள்ள வித்தியாசம்'' என்கிறார் வசந்தி பாபு.