இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | June 30 | Astrology | Bharathi Sridhar | ...
Yash Dayal: "திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டார்" - RCB வீரர் யஷ் தயாள் மீது இளம்பெண் புகார்
இந்தாண்டு ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற ஆர்.சி.பி அணியில் கடந்த இரண்டாண்டுகளாக முக்கிய பவுலராகத் திகழும் யஷ் தயாள், திருமணம் செய்வதாகக் கூறி தன்னை ஏமாற்றிவிட்டதாக உத்தரப்பிரதேச பெண் ஒருவர் புகாரளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
காசியாபாத்தைச் சேர்ந்த அப்பெண் மாநில முதலமைச்சர் அலுவலகத்தின் ஆன்லைன் குறைதீர்க்கும் போர்ட்டலில் யஷ் தயாள் மீது தனது புகாரைப் பதிவுசெய்திருக்கிறார்.

புகாரில் அப்பெண்ணின் கூறியதன்படி, கடந்த 5 ஆண்டுகளாக அந்தப் பெண்ணுடன் அவர் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறார்.
மேலும், அவர் தனது குடும்பத்தினரிடம் அப்பெண்ணை தங்களின் மருமகள் என்று அறிமுகம் செய்ததால் அப்பெண்ணும் அவரை முழுமையாக நம்பினார்.
அதன்பின்னர், திருமணத்தின் பெயரில் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அப்பெண்ணை அவர் பயன்படுத்தியிருக்கிறார்.
குறிப்பாக, ரிலேஷன்ஷிப்பில் இருந்தபோது மனதளவிலும், பொருளாதார ரீதியாகவும் அவரைச் சார்ந்திருக்க நேர்ந்ததாகவும், ஆனால் பிறகுதான் வேறு சில பெண்களுடனும் அவர் இதேபோன்ற ரிலேஷன்ஷிப்பில் இருப்பது தெரியவந்தது என்றும் புகாரில் அப்பெண் குறிப்பிட்டிருக்கிறார்.
ஜூன் 14-ம் தேதியே பெண்களுக்கான ஹெல்ப்லைன் நம்பர் 181-ஐ தொடர்பு கொண்டபோதும் காவல் நிலையம் வரை இந்த விவகாரம் செல்லவில்லை என்பதால் முதல்வர் அலுவலகத்தை நாடியதாகக் கூறும் புகார்தாரர், "இந்த விஷயத்தை உடனடியாக பாரபட்சமின்றி விசாரித்து, குற்றம்சாட்டப்பட்டவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே என் கோரிக்கை.

இந்த நடவடிக்கை எனக்கானது மட்டுமல்லாது, என்னைப் போன்று பாதிக்கப்படுகிற அனைத்து பெண்களுக்கும் முக்கியமானது." என்று புகாரில் தெரிவித்திருக்கிறார்.
மேலும், இதற்கான ஆதாரங்களாக இருவருக்குமான மெசேஜ்கள், ஸ்கிரீன்ஷாட்கள், வீடியோ கால் மற்றும் புகைப்படங்கள் தன்னிடம் இருப்பதாக அப்பெண் புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்.
இருப்பினும் யஷ் தயாள் தரப்பிலிருந்து எந்தவொரு அறிக்கையும் வெளியாகவில்லை.