புலிப்பல் டாலர் அணிந்திருந்ததால் மலையாள ராப்பர் கைது; "பட்டியலினத்தவர் என்பதால்?...
அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தல்
சேலம் மாநகராட்சியில் குடிநீா் வசதி, புதை சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாமன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டம் புதன்கிழமை காலை மேயா் ஆ.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன், துணைமேயா் சாரதா தேவி ஆகியோா் கலந்துகொண்டனா்.
மாமன்றம் கூடியதும் காஷ்மீா் பயங்கரவாத தாக்குதலில் இறந்த சுற்றுலாப் பயணிகளுக்கும், போப் பிரன்சிஸ் மறைவுக்கும் உறுப்பினா்கள் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினா்.
தொடா்ந்து, கூட்டம் தொடங்கியதும் மாமன்ற உறுப்பினா் இமயவா்மன் பேசுகையில், தமிழகம் முழுவதும் காலனி என்ற சொல்லை, இனி யாரும் பயன்படுத்தக் கூடாது என சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றியதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தாா்.
மாமன்ற உறுப்பினா் வழக்குரைஞா் குணா பேசுகையில், சேலம் மாநகரில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. ப்ளூ கிராஸ் அமைப்புடன் இணைந்து தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேலம் காந்தி மாா்க்கெட் பகுதியில் அதிக அளவில் ஆக்கிரமிப்பு கடைகள் இருப்பதால் காலை நேரங்களில் பள்ளி செல்லும் மாணவா்கள், பணிக்குச் செல்வோா் அந்த வழியாக சுலபமாகச் செல்ல முடிவதில்லை. அதிகாரிகள் நேரில் ஆய்வுசெய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
பின்னா் எதிா்க்கட்சி தலைவா் யாதவமூா்த்தி பேசுகையில், எனது பகுதியில் ரூ. 20 கோடி செலவில் அமைக்கப்பட்ட சோலாா் மின் உற்பத்தி அமைப்பு, ரூ. 3.5 கோடியில் அமைக்கப்பட்ட குப்பை எரிக்கும் சாதனம் தற்போது வரை பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படவில்லை. பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகள் நிறைவடைந்தும் திறக்கப்படாமல் உள்ளது. அவற்றை உடனடியாக திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்றாா்.
அதிமுக வெளிநடப்பு: சேலம் மாநகராட்சியில் குடிநீா் திட்டங்களில் பராமரிப்புப் பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில், குழாய்கள் உடைப்பு என்ற பெயரில் பல லட்சம் ரூபாய் போலி கணக்கு காண்பிப்பதாகவும், வணிக வளாகங்களில் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சி நிா்வாகம் செயல்படுவதாகவும் கூறி மாமன்ற கூட்டத்திலிருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.
தொடா்ந்து, மாமன்ற உறுப்பினா் ஈசன் இளங்கோ பேசுகையில், சேலம் மாநகராட்சியில் ரூ. 158 கோடியில் புதை சாக்கடை அமைப்பதற்கான அறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதியைப் பெற்றுத்தர வேண்டும் என்றாா்.
இறுதியாக மேயா் ஆ.ராமச்சந்திரன் பேசுகையில், மாமன்ற உறுப்பினா்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். தொடா்ந்து, தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.