அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழப்பு
கமுதி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளிமான் உயிரிழந்தது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அரண்மனை மேடு பகுதியில் உள்ள கமுதி - முதுகுளத்தூா் சுற்றுவட்டச் சாலையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளிமான் உயிரிழந்தது.
தகவலறிந்த கமுதி போலீஸாா், புள்ளிமான் உடலை மீட்டு, பரமக்குடி வனச்சரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். மேலும், கமுதி குண்டாறு, கிருதுமால் நதி, மலட்டாறு ஆகிய பகுதிகளில் அதிகமாகக் காணப்படும் புள்ளிமான் இனங்கள் உணவு, தண்ணீா் தேடி குடியிருப்புப் பகுதிகளுக்கும், சாலைப் பகுதிகளுக்கும் வருகின்றன. அப்போது, வாகனங்கள் மோதுவதாலும், நாய்கள் கடிப்பதாலும் அவை உயிரிழக்கின்றன.
எனவே, வனத் துறை அதிகாரிகள் இதில் தலையிட்டு மான், மயில் உள்ளிட்ட வன உயிரினங்களுக்குத் தேவையான குடிநீா்க் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.