மீன்வளத் துறை அனுமதியின்றி மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள்
பாம்பன், மண்டபம் துறைமுகத்திலிருந்து மீன்வளத் துறை அனுமதியின்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் திங்கள்கிழமை நள்ளிரவு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
தமிழகத்தில் மீன் இனப்பெருக்கக் காலமான ஏப். 15 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை கடலில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டது. இதனால், மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் பாம்பன், மண்டபம் துறைமுகங்களில் 250-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் நிறுத்தப்பட்டன. தற்போது, தடைக்காலம் நிறைவடைந்த நிலையில், கடல் சீற்றம் காரணமாக மேலும் ஒரு நாள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத் துறையினா் தடைவிதித்து பின்னா் விலக்கிக்கொண்டனா்.
இந்த நிலையில், பாம்பன், மண்டபம் தென் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்கள், செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு மீன்வளத் துறையின் அனுமதிச் சீட்டு பெற்றுக்கொண்டு கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டும் என மீன்வளத் துறையினா் மீனவ சங்கத்தினரிடம் தெரிவித்தனா்.
இந்த நிலையில், மீன்வளத் துறை அனுமதியின்றி திங்கள்கிழமை நள்ளிரவில் மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்றனா். மீன்பிடிக்க அனுமதி டோக்கன் வழங்க வந்த அதிகாரிகள், துறைமுகத்தில் படகுகள் இன்றி வெறிச்சோடி இருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா். மேலும், அனுமதியின்றி மீன்பிடிக்கச் சென்ற படகுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.