ஜோத்பூரில் ஆர்எஸ்எஸ் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் தொடங்கியது!
அதிமுகவை ஒன்றிணைக்கும் செங்கோட்டையனின் முயற்சி நல்ல முயற்சி: நயினார் நாகேந்திரன்
அதிமுகவை ஒன்றிணைக்கும் செங்கோட்டையனின் முயற்சி நல்ல முயற்சி. அணைவரும் ஓரணியில் இணைவது நிச்சயம் நடக்கும். அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை பத்து நாள்களுக்குள் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை ஏற்றால்தான் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரத்தில் பங்கேற்பேன். அப்படி ஒருங்கிணைக்கப்படவில்லை என்றால், ஒருங்கிணைப்பு பணிகளை நாங்களே மேற்கொள்வோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
இந்நிலையில், சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 154 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, திருநெல்வேலியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில்,
அதிமுகவை ஒன்றிணைக்கும் செங்கோட்டையனின் முயற்சி நல்ல முயற்சி. ஆனாலும், அது அதிமுகவின் உள்கட்சி விவகாரம். அதிமுக குறித்து நான் பேசுவது சரியாக இருக்காது. அரசியலில் யாருடைய குரலாகவும் யாரும் பேச மாட்டார்கள். அவரவர் தங்களுக்குச் சொந்தமான குரலில், தங்களது கருத்தைத்தான் பேசுகிறார்கள். அவர்கள் கருத்தைப் பேசி முடித்துக் கொள்ள வேண்டும். எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால், திமுக ஆட்சியை நிச்சயம் அகற்ற முடியும்," என்றார்.
பாஜக கூட்டணியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோர் வெளியேறியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, "அரசியலில் எதுவுமே நிரந்தரம் கிடையாது. தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்கள் இருக்கின்றன. கடைசி ஒரு மாதத்தில் கூட நிறைய மாற்றங்கள் ஏற்படலாம். ஆட்சி மாற்றம் வரும், ஆட்சி மாற்றம் நடக்கும். நிச்சயமாக நல்லது நடக்கும் என்று பதிலளித்தார்.
பாஜகவில் குடும்ப அரசியல் நிலவுவதாகவும், உங்கள் மகன் பாலாஜிக்கு பொறுப்பு வழங்கப்பட்டது குறித்த கேள்விக்கு, "பாஜகவில் குடும்ப அரசியல் இல்லை. அவரவர் அவர்களுடைய வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பதிலளித்தார்.
மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்காதது குறித்த கேளிவிக்கு, "அதுகுறித்து அவர் கட்சித் தலைமையிடம் முன்பே தெரிவித்துவிட்டார்," என்று கூறினார்.