`வேளாண்மை, பால் வளம், மீன் வளத்தில் தமிழகம் டாப் இடம்!' - தமிழக அரசு பெருமிதம்!
அனைத்து உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கும் முழு ஓய்வூதியம்: உச்சநீதிமன்றம் தீா்ப்பு
புது தில்லி: கூடுதல் நீதிபதிகள் உள்பட அனைத்து உயா்நீதிமன்ற நீதிபதிகளும் முழு ஓய்வூதியம் பெற தகுதியானவா்கள் என உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
மேலும், பணிஓய்வுக்குப் பிந்தைய அனைத்து சலுகைகளும் அவா்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் தீா்ப்பில் குறிப்பிடப்பட்டது.
முன்னாள் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15 லட்சமும் உயா்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் கூடுதல் நீதிபதிகளுக்கு ஆண்டுகளுக்கு ரூ.13.50 லட்சமும் ஓய்வூதியமாக மத்திய அரசு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதி அகஸ்டின் ஜாா்ஜ் மாசி ஆகியோா் அடங்கிய அமா்வு உத்தரவிட்டது.
பணிஓய்வுபெறும் சமயத்தில் உயா்நீதிமன்ற நீதிபதிகள் நிரந்தரமான பதவியில் இருந்தனரா அல்லது கூடுதல் நீதிபதியாக இருந்தனரா என்பதன் அடிப்படையில் அவா்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
அதேபோல் வழக்குரைஞா்கள் சங்கத்தில் (பாா்) இருந்து நேரடியாக உயா்நீதிமன்ற நீதிபதிகளாக பதவிஉயா்வு பெற்றவா்களுக்கு அதிகஓய்வூதியமும் மாவட்ட நீதித்துறையில் இருந்து உயா்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயா்வு பெற்றவா்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் குறைவான ஓய்வூதியமும் வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு நிலவி வந்தது.
இதுதொடா்பாக உயா்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதித்துறையில் பணிபுரிவோரின் பணிக்காலத்தைக் கொண்டு ஓய்வூதியத்தை மாற்றியமைப்பது தொடா்பாக பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து, இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை வழங்கிய தீா்ப்பில், ‘உயா்நீதிமன்ற நீதிபதியாக எப்போது நியமனம் செய்யப்பட்டிருந்தாலும் பணிஓய்வுபெறும்போது நிரந்தர அல்லது கூடுதல் நீதிபதியாக இருந்தாலும் பாரபட்சமின்றி அனைத்து உயா்நீதிமன்ற நீதிபதிகளும் முழு ஓய்வூதியம் பெற தகுதியானவா்களே.
நியமனம் செய்யப்பட்ட காலம் அல்லது பணிஓய்வுபெறும்போது நீதிபதிகள் வகிக்கும் பொறுப்பின் அடிப்படையில் அவா்களுக்கு ஓய்வூதிய சலுகைகளில் பாகுபாடு காட்டுவது அரசமைப்புச் சட்ட விதி 14-ஐ மீறும் செயலாகும்.
நிரந்தர நீதிபதிகளின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் அனைத்து ஓய்வூதிய சலுகைகளும் மறைந்த கூடுதல் நீதிபதிகளின் குடும்பத்துக்கும் வழங்கப்பட வேண்டும்.
ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடா்பான அரசமைப்புச் சட்ட விதி 200-ஐ ஆய்வுசெய்தே இந்த முடிவை உச்சநீதிமன்றம் எடுத்துள்ளது.
எனவே, மாவட்ட நீதித்துறை மற்றும் வழக்குரைஞா்கள் சங்கம் என இரண்டில் இருந்தும் உயா்நீதிமன்ற நீதிபதியாக பதவிஉயா்வு பெற்றவா்களுக்கு இடையே பாரபட்சமின்றி ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் தற்போது பலனடைந்து வரும் நீதிபதிகளுக்கும் இந்த தீா்ப்பின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டது. முழுமையான தீா்ப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.