‘அன்னையின் பெயரில் ஒரு மரம்’ பிரசார இயக்கம்! ஆளுநா் ஆா்.என்.ரவி தொடங்கி வைத்தாா்
சென்னை ஆளுநா் மாளிகையில் ‘அன்னையின் பெயரில் ஒரு மரம்’ பிரசார இயக்கத்தை ஆளுநா் ஆா். என். ரவி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.
இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கிண்டி ஆளுநா் மாளிகையில் ஆளுநா் ரவி மற்றும் அவது மனைவி லக்ஷ்மி ரவி, இயற்கை வேளாண்மை முன்னோடிகள் மற்றும் தலைவா்கள், வேளாண் தொழில்முனைவோருடன் சோ்ந்து, ‘அன்னையின் பெயரில் ஒரு மரம்’ பிரசார இயக்கத்தின் கீழ், 27 மரக் கன்றுகள் ஒவ்வொன்றையும் ஒரு நட்சத்திரத்தைக் குறிக்கும் வகையில் நட்டனா்.
இது அன்னை பூமி மீதான நமது ஆழமான பாரம்பரிய பிணைப்பையும் மரியாதையையும் கொண்டாடுகிறது என பதிவிட்டுள்ளாா் ஆளுநா். உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தில்லியில் இந்தத் திட்டத்தை பிரதமா் மோடி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.