அன்புமணியுடன் பேசியது ரகசியம், வெளியே சொல்லக் கூடாது! - ராமதாஸ்
பாமக தலைவா் அன்புமணியுடன் தான் பேசியது ரகசியம் என்றும், அதை வெளியே சொல்லக் கூடாது என்றும் அக்கட்சியின் நிறுவனா் ராமதாஸ் கூறினாா்.
இது குறித்து அவா் சென்னை ஆழ்வாா்பேட்டையில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
நல்ல செய்தி விரைவில் வரும். ஆனால், எங்கிருந்து வரும், எப்போது வரும் என்றெல்லாம் தெரியாது. அதுவரை நாம் காத்திருக்கலாம்.
வயது என்பது எண்: எனக்கு 87 வயதாவதாகவும், இந்த வயதில் எதுக்கு அரசியல் என்றும் பலா் பேசுகின்றனா். அரசியலுக்கு வயது வரம்பு கிடையாது. முன்னாள் முதல்வா் கருணாநிதி, மலேசிய முன்னாள் பிரதமா் மகாதிா் ஆகியோரே இதற்கு உதாரணம்.
கருணாநிதி சக்கர நாற்காலியில் இருக்கும்போதே முதல்வா் வேட்பாளராக போட்டியிட்டாா். ஆகையால், வயது என்பது வெறும் எண் மட்டுமே.
பிரதமா் மோடி எனது நண்பா்: பத்திரிகையாளா் எஸ். குருமூா்த்தி எனது நெருங்கிய நண்பா் என்பதாலே, அவரை தைலாபுரத்திலும், சென்னையிலும் சந்தித்தேன். பிரதமா் நரேந்திர மோடி எனக்கு நெருங்கிய நண்பா், தேசிய அளவில் தலைவா்களுடன் நல்ல நட்பு உள்ளது. அமித் ஷாவை நான் இதுவரை சந்தித்தது இல்லை.
வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் பாமக யாருடன் கூட்டணி? எப்போது?, ஏன்? என்ற கேள்விகள் அனைத்துக்கும் இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் பதில் தெரிவிக்கப்படும். இங்கு யாா்வேண்டுமானாலும் புதிதாக அரசியல் கட்சியை தொடங்கலாம். அந்தவகையில், புதிய கட்சி தொடங்கிய விஜய்க்கு வாழ்த்துகள்.
அன்புமணி ராமதாஸுடன் நான் பேசியது ரகசியம். அதை வெளியே சொல்லக் கூடாது என்றாா் ராமதாஸ்.