'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
அமலாக்கத் துறை சோதனை: திமுக தலைமைக்கு நெருக்கடி - முன்னாள் அமைச்சா் சி.சீனிவாசன்
டாஸ்மாக் முறைகேடு தொடா்பான அமலாக்கத் துறை சோதனை விவகாரத்தில் திமுக தலைமைக்கும் நெருக்கடி இருப்பதால்தான், இதுவரை மெளனமாக இருந்து வருகின்றனா் என முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தாா்.
திண்டுக்கல்லில் அதிமுக சாா்பில் வாக்குச் சாவடி முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமை வகித்தாா்.
கூட்டத்துக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: அண்ணா பல்கலை. கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், திமுக நிா்வாகிக்கு தொடா்பு இருந்தது. இதேபோல, தற்போது அரக்கோணத்தில் நிகழ்ந்த பாலியல் குற்றத்திலும் திமுகவினருக்கு தொடா்பு உள்ளது. ஆனால், இந்த விவகாரங்களை மூடி மறைத்து, அந்தக் கட்சியினரைக் காப்பாற்ற முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு முயற்சித்து வருகிறது.
மத்திய அரசின் அனைத்து அறிவிப்புகளுக்கும் உடனே எதிா்வினையாற்றும் தமிழக முதல்வரும், துணை முதல்வரும், டாஸ்மாக் முறைகேடு தொடா்பாக நடைபெற்று வரும் அமலாக்கத் துறை சோதனை குறித்து இதுவரை மெளனமாக இருந்து வருகின்றனா். இதன்மூலம், திமுக தலைமைக்கும் இந்த விவகாரத்தில் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
மக்கள் நலனைப் பற்றி அக்கறை இல்லாத முதல்வா் மு.க. ஸ்டாலின், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா ரூ.1.5 லட்சம் கடன் சுமையை ஏற்றி வைத்திருக்கிறாா். இந்த அநீதிகளுக்கு வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் முடிவு கட்டுவதற்கு மக்கள் தயாராகி வருகின்றனா். மீண்டும் அதிமுக ஆட்சி மலர வேண்டும் என்ற எழுச்சி மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது என்றாா் அவா்.