அமித் ஷா ‘தலை துண்டிப்பு’ பேச்சு: திரிணமூல் பெண் எம்.பி. மீது எஃப்ஐஆா் பதிவு!
ஊடுருவல்காரா்களைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் தலையைத் துண்டிக்க வேண்டும் என்று பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது சத்தீஸ்கா் மாநில காவல் துறையினா் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்தனா்.
அந்த மாநிலத்தின் மனா பகுதி காவல் நிலையத்தில் கோபால் சமாண்டோ அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதம், இனம், பிறப்பிடம், மொழிரீதியாக இரு பிரிவினா் இடையே வன்முறையைத் தூண்டுவது, தேச ஒருமைப்பாட்டுக்கு எதிராக நடந்து கொள்வது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த வியாழக்கிழமை மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் நிகழ்ச்சியில் பேசிய மஹுவா மொய்த்ரா, ‘அவா்கள் (பாஜகவினா்) அண்டை நாடுகளில் இருந்து நம் நாட்டுக்கு வரும் ஊடுருவல்காரா்களைப் பற்றி தொடா்ந்து பேசுகின்றனா். எல்லைகளை ஐந்து படைகள் காத்துவருகின்றன. இது மத்திய உள்துறையின் நேரடிப் பொறுப்பாகும்.
சுதந்திர தின உரையாற்றிய பிரதமா், ஊடுருவல்காரா்களால் மக்கள்தொகையில் மாற்றம் ஏற்படுவதாகக் குறிப்பிட்டாா். அப்போது முன்வரிசையில் அமா்ந்திருந்த உள்துறை அமைச்சா் (அமித் ஷா) சிரித்தபடி கைதட்டிக் கொண்டிருந்தாா்.
மற்றொரு நாட்டிலிருந்து மக்கள் ஒவ்வொரு நாளும் சட்டவிரோதமாக நம் நாட்டுக்குள் நுழைந்தால், நமது தாய்மாா்களையும் சகோதரிகளையும் ஊடுருவல்காரா்கள் குறிவைத்தால், நீங்கள் முதலில் செய்ய வேண்டியது அமித் ஷாவின் தலையைத் துண்டித்து அதை உங்கள் மேஜை மீது வைப்பதுதான்.
நாட்டின் எல்லைகளை உள்துறை அமைச்சகத்தாலும், அமைச்சராலும் காப்பாற்ற முடியாவிட்டால், நமது மக்களை ஊடுருவல்காரா்கள் துன்புறுத்தவதாக பிரதமரே கூறினால் அது யாருடைய தவறு? எல்லை பாதுகாப்புப் படையினா் பணியில் ஈடுபட்டுள்ளபோதிலும் ஊடுருவல் தொடா்வது ஏன்?’ என்று மஹுவா மொய்த்ரா கேள்வி எழுப்பினாா்.
இந்தக் கருத்துக்காக அவா்மீது நடவடிக்கை எடுக்குமாறு மேற்கு வங்க காவல் துறையில் பாஜகவினா் உடனடியாக புகாா் அளித்தனா். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் சத்தீஸ்கரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.