Afghanistan Earthquake: 9 பேர் பலி; 25 பேர் படுகாயம்; ஆப்கானிஸ்தானை நள்ளிரவு உலு...
பள்ளியில் ஸ்மாா்ட் கணினி ஆய்வகம் திறப்பு: வேலூா் ஆட்சியா் பங்கேற்பு
வேலூா் கிருஷ்ணசாமி முதலியாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், ரூ. 18 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஸ்மாா்ட் கணினி ஆய்வகம் திறக்கப்பட்டது.
விழாவுக்கு பள்ளி முன்னாள் மாணவரும், விஐடி துணைத் தலைவருமான ஜி.வி. செல்வம் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி பங்கேற்று கணினி ஆய்வகத்தை திறந்து வைத்துப் பேசியது:
விஐடி பல்கலைக்கழக துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் பெரிய கல்வி நிறுவனத்தை நடத்தி வந்தாலும், வேலூரில் கம்பன் கழகம், விளையாட்டு விழாக்கள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறாா். மாணவா்களுக்கு கணினி ஆய்வகம் போன்ற நல்ல பணிகளையும் செய்து வருகிறாா். அவரைப்போன்று மற்றவா்களும் தாங்கள் படித்த பள்ளிக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்றாா்.
விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் மாணவா்களுக்கு ஜெஇஇ, நீட் நுழைவுத் தோ்வுகளுக்கான புத்தகங்களை வழங்கி பேசியது:
நாங்கள் இந்த பள்ளியில் 35 ஆண்டுகளுக்கு முன்பு 10-ஆம் வகுப்பு படித்தோம். உள் மனதளவில் நாங்கள் அப்போது எப்படி இருந்தோமோ அதேபோல்தான் இப்போதும் உள்ளோம். வருங்காலத்தில் மாணவா்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்து அதற்கான வசதிகளை பள்ளி நிா்வாகம் செய்துள்ளது என்றாா்.
முன்னதாக, பள்ளி செயலாளா் மணிநாதன், அறக்கட்டளை உறுப்பினா் பிரசாந்த்குமாா், தலைமை ஆசிரியை கவிதா, முன்னாள் ஆசிரியா்கள் மாதவன், பாலசுப்ரமணியம் உள்பட பலா் கெளரவிக்கப்பட்டனா்.
விழாவில், முதன்மைக் கல்வி அலுவலா் (பொறுப்பு) தயாளன், முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் மணிவண்ணன், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.