அமெரிக்காவின் மிரட்டல் பலிக்காது: சீனா
அமெரிக்காவின் பேச்சுவார்த்தை குறித்து ஆலோசிக்கப்படுவதாக சீனா தெரிவித்தது.
வரி விதிப்பு குறித்து சீனாவுடன் அமெரிக்கா நடத்த விரும்பும் பேச்சுவார்த்தை குறித்து ஆலோசிக்க மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சீனாவின் வெளியுறவு அமைச்சகம் கூறியதாவது, வரி விதிப்பு மற்றும் வர்த்தகப் போரைத் தொடங்கியது, அமெரிக்காதான். அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால், அதில் நேர்மைத்தன்மை இருக்க வேண்டும்.
அந்நாட்டின் தவறான நடைமுறைகளைச் சரிசெய்வது, சீனா மீது மட்டுமான ஒருதலைப்பட்ச வரிவிதிப்பு பிரச்னைகளில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
எந்தவொரு பேச்சுவார்த்தையிலும், அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச வரிவிதிப்பு நடவடிக்கைகள் சரி செய்யப்படாவிட்டால், அது அந்நாட்டின் நேர்மையின்மையைத்தான் குறிக்கும்; அதுமட்டுமின்றி, அந்நாட்டின் மீதான நம்பிக்கையை குறைக்கும்.
மேலும், பேச்சுவார்த்தையின்போது, வற்புறுத்தலோ மிரட்டலோ சீனாவிடம் பலிக்காது என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் மீது பல்வேறு நாடுகள் அதிக வரி விதிப்பதாகக் கூறி, சீனாவைத் தவிர்த்து, மற்ற நாடுகள் மீது பரஸ்பர வரிவிதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
மேலும், அமெரிக்காவுக்கு எதிராக சீனா செயல்படுவதாகக் கூறி, சீன பொருள்களுக்கு மட்டும் 245 சதவிகிதம்வரையில் வரியை அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்தது. இதற்கு பதிலடியாக, அமெரிக்கா மீது சீனாவும் வரி விதிப்பை அறிவித்தது.
இதனிடையே, வரிவிதிப்பு குறித்து, தன்னிடம் சீன அதிபர் ஷி ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.
இருப்பினும், அவ்வாறு எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்று சீன வெளியுறவு அமைச்சகம் மறுத்தது.
இதையும் படிக்க:டிரம்ப் 100 நாள்கள்! நூற்றுக்கு நூறு பெற்றாரா?