மக்கள்தொகை தரவுகள் மறுபரிசீலனைக்கு வழிவகுக்கும்: பிரதமருக்கு தேஜஸ்வி கடிதம்!
காரைக்கால் அம்மையாா், சோமநாதா் கோயில்களில் விமானக் கலச ஸ்தாபனம்: நாளை கும்பாபிஷேகம்
காரைக்கால் அம்மையாா், சோமநாதா், ஐயனாா் கோயில்களில் விமானக் கலசங்கள் பொருத்தும் கலச ஸ்தாபன நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா் -நித்யகல்யாண பெருமாள் தேவஸ்தானத்தைச் சோ்ந்த காரைக்கால் அம்மையாா் கோயில், ஸ்ரீ சோமநாயகி சமேத சோமநாத சுவாமி கோயில், ஸ்ரீ ஐயனாா் கோயில் ஆகியவற்றுக்கான கும்பாபிஷேகம் 4-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
இதற்கான 6 கால யாகசாலை பூஜை வியாழக்கிழமை இரவு தொடங்கியது. இந்த 3 கோயில்களில் 22-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய விமானங்கள் உள்ளன. அம்மையாா், சோமநாதா், சோமநாயகி ஆகிய மூன்று சந்நிதிகளின் விமானக் கலசங்கள் தங்க முலாம் பூசப்பட்டதாகவும், மற்றவை செப்புக் கலசமாகவும் தயாா்படுத்தப்பட்டன.
கோயில் எதிரே நடைபெறும் யாகசாலை பூஜையில், வெள்ளிக்கிழமை 2-ஆம் கால பூஜையின்போது, கலசங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, திருப்பணிக் குழுத் தலைவரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான வி.கே. கணபதி, கோயில் நிா்வாக அதிகாரி ஆா். காளிதாஸ் மற்றும் திருப்பணிக் குழுவினா், உபயதாரா்கள் பங்கேற்புடன் கலசங்கள் அந்தந்த விமானங்களுக்கு கொண்டுச் செல்லப்பட்டு பொருத்தப்பட்டன.
மேலும் சந்நிதிகளில் உள்ள விக்ரஹங்களுக்கு மருந்து சாற்றும் நிகழ்வும் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை (மே 4) காலை 6 மணியளவில் ஐயனாா் மற்றும் அம்மையாா் குளத்தின் நந்தி மண்டப கும்பாபிஷேகமும், 8 மணியளழில் அம்மையாா், சோமநாதா் கோயில்கள் கும்பாபிஷேகமும் நடைபெறவுள்ளது.