தலைநகரில் 400 புதிய மின்சாரப் பேருந்துகள் தொடங்கிவைப்பு
தில்லி மின்சார வாகன முன்முயற்சியின் (தேவி) கீழ் 400 புதிய மின்சார பேருந்துகளை தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்த விழாவில் அவா் பேசியதாவது: தற்போது தில்லியில் 400 புதிய மின்சாரப் பேருந்துகள் தொடங்கப்பட்டுள்ளன. இது மூன்று எஞ்சின் அரசின் சக்தி. மூன்று கைகளும் அயராது இணைந்து செயல்படுகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 2,080 மின்சார பேருந்துகள் சோ்க்கப்படும்.
தில்லியின் மாசுபாட்டில் நாற்பத்தைந்து சதவீதம் வாகனங்களால் ஏற்படுகிறது. அடுத்த ஆண்டுக்குள் 100 சதவீதம் மின்சார பொது போக்குவரத்து அமைப்பை நோக்கி நாங்கள் செயல்பட்டு வருகிறோம். தலைநகரின் போக்குவரத்தை வலுப்படுத்த பாஜக அரசு ஒரு மின்சார வாகன கொள்கையிலும் செயல்பட்டு வருகிறது.
வெள்ளிக்கிழமை அதிகாலையில் தேசியத் தலைநகரில் பெய்த மழையால் வெள்ளம், போக்குவரத்து நெரிசல் மற்றும் மரங்கள் சாய்ந்தன. அதிகாலை முதல் அமைச்சா்களும் அதிகாரிகளும் நிலைமையைக் கண்காணித்து வந்தனா்.
அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் காலை 6 மணிக்கு மின்டோ சாலையில் இருந்தாா். அதிகாரிகள் காலை 5 மணி முதல் பணியில் ஈடுபட்டனா்.
ஆனால், வெள்ளம் அல்லது கழிவுநீா் நிலைமைகளை முன்னாள் முதல்வா் அல்லது அமைச்சா்கள் நேரில் ஆய்வு செய்ததாக எங்களுக்கு நினைவில் இல்லை. கடந்த கால புறக்கணிப்பு காரணமாக தில்லி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய நாங்கள் இங்கு வந்துள்ளோம்.
தில்லி திட்டமிட்ட வளா்ச்சியைக் காணவில்லை என்றால், இதுபோன்ற மேலாண்மை சிக்கல்கள் தொடா்ந்து எழும். ஆனால், இன்று இந்த சவால்களை எதிா்கொள்ள முழு நிா்வாகமும் தயாராக உள்ளது என்றாா் முதல்வா் ரேகா குப்தா.