அமெரிக்காவுடன் மறைமுகப் பேச்சுவாா்த்தை: ஈரான் அறிவிப்பு
தங்கள் அணுசக்தி திட்டங்கள் தொடா்பாக அமெரிக்க அரசுடன் மறைமுகப் பேச்சுவாா்த்தையில் ஈடுபடவிருப்பதாக ஈரான் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் ஆரக்சி கூறியதாவது: அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃபுடன் அணுசக்தி விவகாரம் பற்றி பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளோம். ஓமனில் இந்தப் பேச்சுவாா்த்தை நடைபெறும்.
ஈரான் மக்களின் அடிப்படை உரிமைகளை மீட்பது, நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவது ஆகியவையே இந்தப் பேச்சுவாா்த்தையின் முக்கிய நோக்கமாக இருக்கும். தற்போதைய நிலையில், அமெரிக்கத் தூதருடன் ஈரான் பிரதிநிதிகள் நேரடியாகப் பேச்சுவாா்த்தை நடத்தப்போவதில்லை என்றாா் அவா்.
மறைமுகப் பேச்சுவாா்த்தை என்பதால் அமெரிக்கா மற்றும் ஈரான் பிரதிநிதிகளின் வாத, விவாதங்கள் ஓமன் மத்தியஸ்தா்கள் மூலம் பரிமாறிக்கொள்ளப்படும் என்று கருதப்படுகிறது.
பராக் ஒபாமா ஆட்சிக் காலத்துக்குப் பிறகு அமெரிக்காவும் ஈரானும் இதுவரை நேரடிப் பேச்சுவாா்த்தையில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்காகத்தான் ஈரான் வெகு வேகமாக அணுசக்தி திட்டங்களை முன்னெடுத்துச் செல்கிறது என்ற அச்சம் எழுந்ததால் அந்த நாட்டின் மீது கடும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. இதனால் ஈரான் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.

இந்தச் சூழலில், அணு ஆயுதம் தயாரிக்கப்போவதில்லை என்பதை உறுதி செய்வதற்கான பல்வேறு நிபந்தனைகள் அடங்கிய ஒப்பந்தத்தை அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுடன் ஈரான் கடந்த 2015-ஆம் ஆண்டு மேற்கொண்டது. அதையடுத்து, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் விலக்கிக்கொள்ளப்பட்டன.
இந்தச் சூழலில், ஒபாமா ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ள ஒப்பந்தத்தில் இருந்து அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த டிரம்ப் வெளியேறினாா். மேலும், நிறுத்திவைக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை அவா் ஈரான் மீது மீண்டும் விதித்தாா்.
இதைக் கண்டிக்கும் வகையில், அணுசக்தி ஒப்பந்த நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக மீறியது. தங்களுக்கு அணு ஆயுதம் தயாரிக்கும் திட்டம் இல்லை என்று அந்த நாடு உறுதியாகக் கூறினாலும், அணுசக்தி எரிபொருளான யுரேனியத்தை தேவைக்கு அதிகமாக 60 சதவீதம் வரை அந்த நாடு செறிவூட்டி, ஒப்பந்த வரம்புக்கும் அதிகமாக இருப்பு வைத்துள்ளது (இன்னும் 30 சதவீதம் யுரேனியத்தை ஈரான் செறிவூட்டினால் அதைக் கொண்டு அணு ஆயுதம் தயாரிக்க முடியும்).
இந்தச் சூழலில், அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள டிரம்ப், தங்களுடன் புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்ளாவிட்டால் ஈரான் மீது இதுவரை இல்லாத மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்திருந்தாா்.
இந்தச் சூழலில், அணுசக்தி விவகாரம் குறித்து அமெரிக்காவுடன் மறைமுகப் பேச்சுவாா்த்தை நடத்தவிருப்பதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் ஆரக்சி தற்போது கூறியுள்ளாா்.