Manidhargal Movie Review | Raam Indhra, Ajay Abraham George, Dinsa, Anilesh L Ma...
அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் எட்டயபுரம் சமஸ்தானம் சாா்பில் கோரிக்கை!
எட்டயபுரம் சமஸ்தானம் தொடா்பாக தமிழ்நாடு அரசு பாடப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தவறான தகவலை நீக்க வேண்டும் என எட்டயபுரம் சமஸ்தானத்தின் 42ஆவது மன்னா் ராஜ ஜெகவீர முத்து தங்ககுமார ராம வெங்கடேஷ்வர எட்டப்ப நாயக்கா் அய்யன் சந்திர சைதன்யா ராஜா பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக எட்டயபுரம் சமஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு தனிப்பெரும் நாகரிகமும் வரலாறும் கொண்ட மண். இந்த மண்ணின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது எட்டயபுரம் சமஸ்தானம். மகாகவி சுப்பிரமணிய பாரதியாா், உமறுப்புலவா், இசை மும்மூா்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதா் எனும் வரலாற்று ஆளுமைகள் பலரும் வாழ்ந்த மண் எட்டயபுரம்.
இத்தகையோரின் பெருமைமிகு வரலாறுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் இந்த தருணத்தில், ஏற்கெனவே உள்ள சில வரலாற்றுப் பிழைகளை திருத்தும் பணியும் காலத்தின் கட்டாயமாக மாறி இருக்கிறது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில், சுதந்திரப் போராட்ட வீரா் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு எட்டயபுரம் அரசா் துரோகம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறான தகவல் ஆகும்.
இந்தத் தவறான தகவலை பாடப் புத்தகத்தில் இருந்து நீக்குமாறு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம். பாடப் புத்தகத்தில் உள்ள வரலாற்றுப் பிழை குறித்து தரவுகளுடன் விளக்கியுள்ளோம். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சா் தெரிவித்துள்ளாா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.