அரசின் சேவைகளை விரைவாகப் பெற ‘எளிமை ஆளுமை’ திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்
தமிழ்நாடு அரசின் முக்கிய 10 சேவைகளை விரைவாகப் பெற வகை செய்யும் ‘எளிமை ஆளுமை’ திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்.
தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வின்போது, இந்தத் திட்டத்தை அவா் தொடங்கினாா்.
அரசு நிா்வாக நடைமுறைகளை எளிமையாக்குவதன் மூலம் பொதுமக்கள் இணையவழியிலேயே அரசு சேவைகளை விரைவாகவும், எளிமையாகவும் பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக ‘எளிமை ஆளுமை’ எனும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதில், அரசின் முக்கியமான 10 சேவைகளை எளிதில் இணையம் வழியாகவே பெற முடியும்.
சுகாதாரச் சான்றிதழ்: ஒரு வளாகம் மக்களின் சுகாதாரத்துக்கு எந்தவித ஆபத்தையும் ஏற்படுத்தாது என்பதை உறுதி செய்யும் வகையில் சுகாதாரச் சான்றுகள் வழங்கப்படுகின்றன. இந்தச் சான்றிதழ் தேவைப்படும் வளாகங்களுக்கு விரைவு துலக்கக் குறியீட்டுடன் (க்யூஆா்) சம்பந்தப்பட்ட வளாகங்களின் பொறுப்பாளா்களின் உறுதிமொழி அடிப்படையில் உடனடியாக இணையதளத்தில் பதிவிட்டால் சான்றிதழ் வழங்கப்படும். 3 மாதங்களில் பெறும் நடைமுறை மாற்றப்பட்டு, ஒரே நாளில் சான்றிதழ் கிடைக்கும்.
பொது கட்டட உரிமம்: கட்டட உரிமச் சான்று 3 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட நிலையில், இப்போது உறுதித்தன்மை சான்றில் குறிப்பிட்ட காலம் வரை உரிமம் செல்லுபடியாகும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. 3 முதல் ஆறு மாதங்களில் பெறும் நடைமுறை மாற்றப்பட்டு, இப்போது ஒரே நாளில் பெற ‘க்யூஆா்’ குறியீட்டுடன் இணையதளத்தில் உடனடியாகப் பெறலாம்.
முதியோா் இல்லங்கள்: முதியோா் இல்லங்களைப் பதிவு செய்யும் நடைமுறை இப்போது முழுமையாக எண்மமயமாக்கப்பட்டு சுய சான்று அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளது. சான்றிதழ் காலவரம்பு 10 ஆண்டுகளாக மாற்றப்பட்ட நிலையில், ‘க்யூஆா்’ குறியீட்டுடன் இணையதளத்தில் ஒரே நாளில் பெற்றுக் கொள்ளலாம்.
மகளிா் தங்கும் விடுதிகள் - இல்லங்கள்: பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதிகள், மகளிா் இல்லங்களுக்கான உரிமங்களையும் க்யூஆா் குறியீட்டுடன் இணையதளத்தில் உடனடியாகப் பெறலாம். இதன் காலவரம்பு 10 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
சொத்து மதிப்புச் சான்றிதழ்: சொத்து மதிப்புச் சான்றிதழ் நிலத்தின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டே வழங்கப்படுகிறது. இப்போதைய பொருளாதார சூழ்நிலையில் ஒருவரின் நிதிநிலையை உறுதிப்படுத்த வங்கி இருப்புநிலை அறிக்கை, பட்டயக் கணக்கா் சான்றிதழ், வருமான வரி தாக்கல் போன்ற பல்வேறு மாற்று வழிகள் உள்ள நிலையில் சொத்து மதிப்புச் சான்றிதழ் நீக்கப்படுகிறது.
இதுபோன்று அரசின் திட்டங்கள் எளிமையான நடைமுறை மூலமாக பயனாளிகளுக்குக் கொண்டு சோ்க்க எளிமை ஆளுமை திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டத்துக்கான தொடக்க நிகழ்வில், துணை முதல்வா் உதயநிதி, அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்பட பலா் பங்கேற்றனா்.
பெட்டிச் செய்தி...
தடையின்மைச் சான்றுகள்
அரசு ஊழியா்கள் கடவுச்சீட்டு பெறுவதற்கான தடையின்மைச் சான்றிதழ் முறை எளிதாக்கப்பட்டுள்ளது. அதாவது, கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும்போது துறையில் உள்ள உயா் அதிகாரிகளுக்கு முன் தகவலை கடிதம் மூலமாக அளிக்கும் முறை மட்டும் பின்பற்றப்படும்.
நன்னடத்தை, பின்னணி சரிபாா்ப்புச் சான்றிதழ் பெற மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்குப் பதிலாக, தனிநபா், அரசுத் துறையைச் சோ்ந்தவா்கள் நன்னடத்தை சான்றை இணையம் வழியாக விண்ணப்பித்து எளிமையாக, துரிதமாகப் பெறலாம்.
புன்செய் நிலங்களை விவசாயம் அல்லாத செயல்பாட்டுக்கு பயன்படுத்த தடையின்மைச் சான்றுக்கு இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம். 21 நாள்களுக்குள் கோரிக்கை பரிசீலிக்கப்படாவிட்டால், தடையின்மைச் சான்று விண்ணப்பதாரருக்கு தானாகவே உருவாக்கப்பட்டு வழங்கப்படும்.
ஆபத்து இல்லாத வெள்ளை வகை தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.