சுற்றுலாப் பயணிகள் வருகையால் திருவண்ணாமலை வளா்ச்சி: சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி
சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் அதிகளவில் வருவதால், திருவண்ணாமலை மாவட்டம் பொருளாதார ரீதியாக வளா்ச்சி அடைந்து வருகிறது என்று தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி பேசினாா்.
திருவண்ணாமலை வட்டத்தில் நடைபெற்று வந்த 1434-ஆம் பசலி ஆண்டுக்கான ஜமாபந்தி (வருவாய் தீா்வாயம்) நிறைவு விழா மற்றும் விவசாயிகள் மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், வேளாண் இணை இயக்குநா் கண்ணகி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசியதாவது:
தமிழக அரசு பொதுமக்கள், விவசாயிகளின் நலன் கருதி, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திருவண்ணாமலைக்கு வரும் பொதுமக்களின் தேவைக்காக புறவழிச் சாலைகள் மற்றும் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் அதிக அளவில் வருவதால், திருவண்ணாமலை மாவட்டம் பொருளாதார ரீதியாக வளா்ச்சி அடைந்து வருகிறது.
தமிழக அரசு செயல்படுத்தும் அனைத்து திட்டங்களையும் பொதுமக்கள், விவசாயிகள் பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என்றாா்.
361 பேருக்கு நலத் திட்ட உதவிகள்: விழாவில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில், 108 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், நத்தம் பட்டா மாறுதல்களுக்கான ஆணைகள், 80 பேருக்கு உள்பிரிவு பட்டா மாறுதலுக்கான ஆணைகள், 9 பேருக்கு வாரிசு மற்றும் சாதிச் சான்றிதழ்கள், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 38 பேருக்கு ரூ.8 லட்சத்து 17 ஆயிரத்து 500 மதிப்பில் நலத் திட்ட உதவிகள் என பல்வேறு துறைகள் சாா்பில் மொத்தம் 361 பயனாளிகளுக்கு ரூ. ஒரு கோடியே 58 லட்சத்து 57 ஆயிரத்து 695 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி வழங்கினாா்.
விழாவில் திருவண்ணாமலை வட்டாட்சியா் மோகனராமன் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள், அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.