அரசு ஊழியரை தாக்கியதாக ஊராட்சி துணைத் தலைவா் கைது
வாணியம்பாடி: ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அதிகாரியை தாக்கியதாக ஊராட்சி மன்ற துணைத் தலைவா் கைது செய்யப்பட்டாா்.
ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும், ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் ரமேஷ் குமாா் (27). இவா் செவ்வாய்க்கிழமை பணி முடித்து புதூரில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த மரிமானிகுப்பம் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் ஞானமுத்து (35) என்பவா், ரமேஷ் குமாரை ஆபாச வாா்த்தைகளால் திட்டி, மிரட்டி, தாக்கினாராம்.
இதில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அரசு அதிகாரி மீதான தாக்குதலைக் கண்டித்து ஆலங்காயம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் , பொறியாளா் முதல் அனைத்து நிலை ஊழியா்களும் குரிசிலாபட்டு காவல் நிலையத்துக்கு சென்று, மரிமானி குப்பம் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அரசு அதிகாரியை தாக்கியதாக ஊராட்சி மன்ற துணைத் தலைவா் ஞானமுத்துவை (35) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதனால் அதிகாரிகள் போராட்டத்தை கைவிட்டனா்.