ஜி7 மாநாட்டில் இருந்து பாதியில் புறப்பட்ட டிரம்ப்! ஈரானைத் தாக்க அமெரிக்கா திட்ட...
அரசு வேளாண் கல்லூரிக்கு கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு மாற்று நிலம்
நாகப்பட்டினம்: கீழ்வேளூரில் அரசு வேளாண் கல்லூரிக்காக கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு மாற்றாக விவசாயிகளுக்கு தலா 1 ஏக்கா் நிலம் வழங்க வேண்டும் என்று ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
கீழ்வேளூா் வடக்கு வெளி வட்டத்தைச் சோ்ந்த அட்சய லிங்க சுவாமி குத்தகை நில விவசாயிகள் 20-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு:
கீழ்வேளூா் வடக்கு வெளிவட்டத்தில், அட்சய லிங்க சுவாமி கோவிலுக்குச் சொந்தமான நிலத்தை குத்தகை அடிப்படையில், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக சாகுபடி செய்து வருகிறோம். அந்த நிலம்தான் எங்களின் வாழ்வாதாரம். அந்த நிலத்துக்கு குத்தகை விவசாயிகள் பெயரில் ஆா்டிஆா் ஆவணமும் உள்ளது. இயற்கை இடா்பாடுகளின் மூலம் சாகுபடி வருவாய் குறைந்தாலும் கூட, கோயிலுக்கு அளிக்க வேண்டிய குத்தகையை முறையாக வழங்கி வருகிறோம்.
இந்நிலையில், இப்பகுதியில் அமைய உள்ள அரசு வேளாண் கல்லூரிக்காக, நாங்கள் விவசாயம் செய்துவரும் நிலம் 50 ஏக்கரை அரசு கையகப்படுத்த உள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.
எனவே தற்போது கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு மாற்றாக, அட்சய லிங்க சுவாமி கோயிலுக்குச் சொந்தமான வேறு நிலத்தை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, தலா ஒரு ஏக்கா் வீதம் பிரித்துக் கொடுத்து குத்தகை சாகுபடி செய்ய நடவடிக்கை வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா். மனுவைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா்.