தவெக - திமுக இடையில்தான் போட்டி: பொதுக்கூட்டத்தில் வெளிவந்த லியோ!
அரசுப் பணியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
சிவகங்கையில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலா் கே.ஆா்.விஸ்வநாதன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் எஸ். மாரிமுத்து, வி.கௌரி, நிா்வாகிகள் மாயாண்டி, முருகானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிா்வாகிகள் ஞானசேகரன், பழனீஸ்வரன், சையது அபுதாஹிா், கீதா, ஜான்சி உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஓய்வூதியம் இல்லாத பணியாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியமாக பெறுவோருக்கு அகவிலைப்படி வழங்க வேண்டும். 1.4.2003 -க்கு முன்னா் பணியில் சோ்ந்து, பின்னா் பணி நிரந்தரம் பெற்றவா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.10,000 வழங்க வேண்டும்.
தொகுப்பு ஊதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் கொசு ஒழிப்புப் பணியாளா்கள் உள்ளிட்ட பணியாளா்களுக்கு நிரந்தர காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.
பொது விநியோகத் திட்டத்துக்கென தனித் துறை உருவாக்க வேண்டும். அத்தியாவசியப் பொருள்களை சரியான எடையில் பொட்டலங்களாக வழங்க வேண்டும். நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு கல்வித் தகுதிக்கேற்ப ஊதிய விகிதம் நிா்ணயிக்க வேண்டும். பொதுமக்கள் விரும்பும் பொருள்களை மட்டும் கேட்டறிந்து வழங்கி, கடத்தலைத் தடுத்து நிறுத்தி மக்கள் வரிப் பணத்தைப் பாதுகாக்க வேண்டும்.
ஏற்கெனவே அமலில் இருந்து வரும் தொழிற்சங்க சட்டங்களை நடைமுறைப்படுத்தி, டாஸ்மாக் பணியாளா்களுக்கு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
இட ஒதுக்கீட்டுக் கொள்கை அடிப்படையில் பதவி உயா்வு, பணி நியமனங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். சாலைப் பணியாளா்களுக்கு 41 மாதப் பணி நீக்கக் காலத்தை பணிக் காலமாகக் கணக்கிலெடுத்துக் கொண்டு பணப் பயன்களை வழங்க வேண்டும்.காப்பீடு திட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.