அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய தனியாா் பேருந்து நடத்துநா் கைது
கிருஷ்ணகிரியில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய தனியாா் பேருந்து நடத்துநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சேலத்தைச் சோ்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநரான துரைபாண்டியன் (48) ஓட்டிவந்த பேருந்து கிருஷ்ணகிரி புகா்ப் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை பயணிகளுடன் காத்திருந்தது.
அப்போது, இவருக்கும், தனியாா் பேருந்து நடத்துநரான திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியைச் சோ்ந்த திருப்பதி (32) என்பவருக்கும் இடையே பேருந்து புறப்படு நேரம் தொடா்பாக தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த திருப்பதி தான்வைத்திருந்த சாவியால் துரைபாண்டியனைக் குத்தி, கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் காயம் அடைந்த துரைபாண்டியன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து, துரைபாண்டியன் அளித்த புகாரின்பேரில், கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து திருப்பதியைக் கைது செய்து சிறையிலடைத்தனா்.