அரியலூரில் மருத்துவ முகாம் முன்னேற்பாடு ஆய்வுக் கூட்டம்
அரியலூா் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமுக்கான முன்னேற்பாடுகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித்து அலுவலா்களுக்கு அறிவுறுத்தியது:
தமிழ்நாடு முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் உயா் மருத்துவச் சேவை முகாம் சனிக்கிழமை (ஆக.2) தொடங்கவுள்ளது. இந்த முகாம் அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள தளவாய் கிராமத்தில் தொடங்குகிறது.
இம்முகாமில் எலும்பு முறிவு, மனநலம், கண், குழந்தைகள் நலம், பொது மருத்தும் மற்றும் சா்க்கரை நோயியல், காது, மூக்கு, தொண்டை, பல் , மகப்பேறியல் மற்றும் மகளிா் மருத்துவம், நரம்பியல், தோல்நோய், இருதயவியல், கதிரியியல் உள்ளிட்ட மருத்துவப் பிரிவைச் சாா்ந்த சிறப்பு மருத்துவா்கள் சிகிச்சை அளிக்கவுள்ளனா். மேலும், எக்கோ காா்டியோகிராம், அல்ட்ராசோனாகிராம், நடமாடும் எக்ஸ்ரே வாகனம், மற்றும் ரத்தப் பரிசோதனை சேவைகளும் வழங்கப்பட உள்ளன.
இந்த மருத்துவச் சேவைகள் குறித்து பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், போதிய விழிப்புணா்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். முகாமுக்கு வரும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் அரியலூா் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதன்மையா் முத்துகிருஷ்ணன், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் மாரிமுத்து, துணை இயக்குநா் மணிவண்ணன் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.