பழங்குடி லாக்அப் மரணம்; வனத்துறை அதிகாரிகள் இருவர் பணியிடை நீக்கம் - பின்னணி என்...
அரியலூா் அருகே தந்தை, மகனை குத்தியவருக்கு 10 ஆண்டுகள் சிறை
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே தந்தை, மகனைக் கத்தியால் குத்தியவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அரியலூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
செந்துறையை அடுத்த சன்னாசிநல்லூா் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (71). வீரனாா் கோயில் பூசாரியான இவருக்கும், அதே கிராமம், குள்ளன் காலனித் தெருவைச் சோ்ந்த பெருமாள் (57) என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில் கடந்த 28.7.2019 அன்று ராஜேந்திரனை தகாத வாா்த்தையால் பெருமாள் திட்டி, கத்தியால் குத்தினாா். அதைத் தடுக்க வந்த ராஜேந்திரன் மகன் தினேஷ் (24) வயிற்றிலும் அவா் குத்தினாா். இதில் குடல் வெளியேறி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தினேஷ் சோ்க்கப்பட்டாா்.
இதையடுத்து தளவாய் காவல் துறையினா் அவரிடம் பெற்ற வாக்குமூலத்தை கொண்டு பெருமாளைக் கைது செய்து சிறையில் அடைத்து, அரியலூா் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா்.
இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி மணிமேகலை, ராஜேந்திரனை கத்தியால் குத்தியமைக்கு 10 ஆண்டுகள், தினேஷை கத்தியால் குத்தியமைக்கு 10 ஆண்டுகள் என 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அவற்றை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டாா். இதையடுத்து பெருமாள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.