ஆண்டிபட்டி திமுக MLA-வைத் திட்டிய MP தங்கதமிழ்செல்வன்; மேடையில் கடும் வாக்குவாதம்; என்ன நடந்தது?
ஆண்டிபட்டியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் துவக்க விழாவில் ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ மகாராஜன் மற்றும் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் கலந்து கொண்டனர்.
முகாமின் வரவேற்பு பேனரில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினரின் படம் மட்டும் இருந்ததைப் பார்த்து கோபத்தோடு மேடைக்கு வந்த தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன், புரோட்டாகால்படி தேனி நாடாளுமன்ற உறுப்பினரின் படம் வரவேற்பு பேனரில் எதற்கு இல்லை என மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பியதோடு, மேடையிலேயே சட்டமன்ற உறுப்பினர் மகாராஜனைத் திட்டினார்.

தொடர்ந்து கோபத்தில் அமர்ந்திருந்த மகாராஜன், நலத்திட்ட உதவிகள் வழங்கும்போது, "நான்தான் வழங்குவேன்" என நலத்திட்ட உதவி வழங்கும் அட்டையை நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வனின் கையில் கொடுக்காமல் பிடுங்கியதால் கோபமடைந்த தங்கதமிழ்செல்வன், தரக்குறைவாக எம்எல்ஏ மகராஜனைத் திட்டினர்.
இதனால் இருவருக்குமிடையே மேடையிலேயே வாக்குவாதம் ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் முன்பு சண்டையிட்டுக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து துவக்க விழா நிகழ்ச்சி முழுமையாக நடைபெறாமல் பாதியிலேயே முடிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட கட்சியினர் அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர்.