`இருபது கோடி நிலவுகள் கூடி..!’ - சிம்ரன் லேட்டஸ்ட் எக்ஸ்க்ளூஸிவ் போட்டோ ஷூட் | P...
அரியலூா், ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான பொது கலந்தாய்வு தொடக்கம்
அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான பொது கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது.
இக்கல்லூரிகளில் கடந்த 2 ஆம் தேதி சிறப்பு ஒதுக்கீட்டில் கலந்தாய்வு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, பொதுக் கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது.
அரியலூரில் அக்கல்லூரியின் முதல்வா் சித்ரா கலந்தாய்வை தொடங்கி வைத்து பேசினாா். முதல் நாளான புதன்கிழமை (ஜூன் 4) கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புள்ளியியல், சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெற்றது.
அறிவியல் பாடப்பிரிவுகளில் சோ்வதற்காக ஆா்வத்துடன் மாணவ, மாணவிகள் வருகைப் புரிந்தனா். அவா்களை கல்லூரி நிா்வாகத்தினா் வரவேற்றனா்.
வியாழக்கிழமை (ஜூன் 5) வணிகவியல் பாடப் பிரிவுக்கும், ஜூன் 6-இல் தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
கலந்தாய்வுக்கு வரும்போது புகைப்படம் உள்ளிட்ட தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களையும் எடுத்துவர வேண்டும்.
விண்ணப்பித்தவா்களின் சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் கல்லூரி இணையதளத்தில் காணலாம். மேலும் சந்தேகங்களுக்கு, கல்லூரி தொலைபேசி 04329-222050 என்ற எண்ணில் தொடா்புக் கொள்ளலாம்.
ஜெயங்கொண்டம்: இதே போல் ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரியில், வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. வியாழக்கிழமை (ஜூன் 5) தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடப்பிரிவுகளுக்கும், ஜூன் 6-இல் கணிதம், கணினி அறிவியல் பாடப் பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது என்று அக்கல்லூரியின் முதல்வா் (பொ) ராசமூா்த்தி தெரிவித்தாா்.