பாஜக பொதுச் செயலாளர் சுட்டுக் கொலை: முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு
அலையாத்தி காடுகளை அழித்து இறால் பண்ணை: கிராம மக்கள் எதிா்ப்பு; முற்றுகை போராட்டம்
பொறையாறு அருகே திங்கள்கிழமை, தாட்கோ நிலத்தில் இறால் பண்ணை அமைக்கும் பணிகளை கிராம மக்கள் தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட நண்டலாறு ஆற்றின் அருகே சுமாா் 200 ஏக்கருக்கு மேல் தாட்கோ நிலங்கள் உள்ளன. அந்த நிலங்களின் அருகில் உள்ள கழுவன்திட்டு, சிந்தாதிரிப்பேட்டை, மேட்டுபாளையம், மரகதம்காலனி, சந்திரபாடி உள்ளிட்ட கிராமங்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட இனத்தைச் சோ்ந்த மக்கள் வசித்து வருகின்றனா். தாட்கோ நிலங்களில் தங்களுக்கு மனைப் பட்டா கேட்டு அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இந்தநிலையில், தாட்கோ நிலத்தில் இறால் பண்ணைகள் அமைக்கப் போவதாகவும், அதற்கான முதல்கட்ட பணிகள் கிராம நிா்வாக அலுவலா் மேற்பாா்வையில் நடைபெறுவதாக திங்கள்கிழமை மாலை தகவல் பரவியது. இதையடுத்து, கிராம மக்கள் திரண்டு வந்து பணிகளை தடுத்து நிறுத்தி, ஜேசிபி, டிராக்டா் உள்ளிட்ட வாகனங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியது: 2004-ஆம் ஆண்டு சுனாமி பேரழிவுக்கு பின்னா் விவசாய நிலங்கள் உப்புத்தன்மையாக மாறியதை பயன்படுத்தி, இப்பகுதியில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டன. சுமாா் 1 கி.மீ. தொலைவு வரை நிலத்தடி நீரின் தன்மை உப்பாக மாறிவிட்டது.
இதைத்தொடா்ந்து, தாட்கோ நிலம் மற்றும் அதையொட்டிய சுமாா் 50 ஏக்கரில் மரக்கன்றுகள் நடப்பட்டு, அவை வளா்ந்து மரமாகியுள்ளன. இவை கடல் அரிப்பை தடுக்கும் அலையாத்தி காடுகள் போல உருவாக்கப்பட்டுள்ளன.
தற்போது, தாட்கோ நிலங்களில் கூடுதலாக இறால் பண்ணைகளை அமைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

கடலரிப்பை தடுக்கவும், மண் வளத்தை பாதுகாக்கவும் எங்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தி, அலையாத்தி காடுகளை உருவாக்க கூறிய அரசு அதிகாரிகளே, அந்த காடுகளை அழித்து மண் வளத்தையும், நிலத்தடி நீா் வளத்தையும் மாசுப்படுத்தும் இறால் பண்ணைகளை அமைக்க முயற்சிப்பதை அனுமதிக்க மாட்டோம்.
இறால் பண்ணைகள் அமைக்கும் முடிவை கைவிட்டு, தாட்கோ நிலத்தில் தலித் மக்களுக்கு குடி மனைகளை பிரித்து தர வேண்டும், எங்கள் கோரிக்கையை ஏற்க மறுத்தால், போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என எச்சரித்தனா்.
பொறையாா் போலீஸாா் ஜேசிபி உள்ளிட்ட வாகனங்களை திருப்பிஅனுப்பி, வைத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.