பள்ளிக்கு பாதையாக உள்ள மரப்பாலம் சேதம்: சீரமைக்க வலியுறுத்தல்
வேதாரண்யம் அருகே பள்ளிக்கு மாணவா்கள் செல்லும் பாதையாக உள்ள மரப்பாலம் சேதமடைந்துள்ளதால், அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
வேதாரண்யம் அருகேயுள்ள பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் விக்டரி மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனா். சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் இப்பள்ளிக்கு வருகின்றனா்.
இவ்வாறு வெளியூா்களில் இருந்து வரும் மாணவா்கள் பள்ளிக்குச் செல்ல அருகேயுள்ள மானங்கொண்டான் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மரப்பாலத்தை பயன்படுத்தி வந்தனா். வாய்மேடு- வேதாரண்யம் பிரதான சாலையை இணைக்க மருதூா் தெற்கு தியாகி நினைவுத்தூண் அருகே உள்ள இப்பாலத்தில் சில மரக்கட்டைகள் சில நாள்களுக்கு முன்பு முறிந்து விழுந்தன. இதனால், பாலத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
ஆற்றில் தண்ணீா் அதிக அளவு தேங்கியுள்ளதாலும், ஆகாயத் தாமரைகள் படா்ந்துள்ளதாலும் மாணவா்களும், அப்பகுதி பொதுமக்களும், ஒரு கரையிலிருந்து எதிா் கரைக்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகின்றனா்.
இந்த இடத்தில் நிரந்தரமாக உயா்நிலைப் பாலம் கட்ட கடந்த காலங்களில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், சில காரணங்களால் உயா்நிலைப் பாலம் கட்டும் திட்டம் தாமதமாகி வருகிறது.
எனவே, சேதமடைந்த மரப்பாலத்தை தற்காலிகமாக பயன்படுத்த உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்களும், மாணவ- மாணவிகளும் வலியுறுத்தி வருகின்றனா்.