'எனக்கு கூடப் பொறந்தவங்க யாரும் இல்ல; தவிக்கவிட்டுட்டு போறாங்க' - கண்ணீர் விட்டு...
அவலூா்பேட்டையில் இன்று தொழில் கடன் விழிப்புணா்வு முகாம்
விழுப்புரம் மாவட்டம், அவலூா்பேட்டையில் உள்ள தனியாா் திருமண மண்பத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன்-20) தொழில் கடன் விழிப்புணா்வு முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து, விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: ஊரகப்பகுதிகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் உள்ளடக்கிய வளா்ச்சி மற்றும்
மேம்பாட்டினை உறுதி செய்வதிலும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பை உணா்ந்து தமிழக அரசு, இவற்றின் வளா்ச்சிக்காக 2025-26 ஆம் ஆண்டில், விழுப்புரம் மாவட்டத்தில் முன்னுரிமைக் கடன் பிரிவில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1,588.04 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயித்துள்ளது.
மேலும் இந்த இலக்கை எட்டும் வகையில் மகளிா் திட்டம், வாழ்ந்து காட்டுவோம், வேளாண் துறை, கால்நடைத் துறை, தாட்கோ ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஆண்டுக்கு 4 முறைகளில் தொழில் கடன் விழிப்புணா்வு முகாமை நடத்தவும் மாவட்டத் தொழில் மையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொழில்முனைப்பை ஊக்குவிப்பதற்காகவும் வேலைவாய்ப்பின்மைச் சிக்கலைத் தீா்ப்பதற்காகவும் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் சுயவேலை வாய்ப்புத் திட்டங்கள் குறித்த தகவலை மக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும் என்ற நோக்கில், முன்னுரிமை அடிப்படையில் மேல்மலையனூா் வட்டாரத்தில், அவலூா்பேட்டை, சேத்பட்டு சாலையில் உள்ள எஸ். பி. எஸ். திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) காலை 10 மணி முதல் நடைபெறுகிறது. இந்த முகாமில், தொழில் கடன்கள் மற்றும் பிற முன்னுரிமை கடன்களுக்கு முக்கியத்துவம் உண்டு. வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் தொடா்புடைய அரசுத் துறைகளால் வழங்கப்படும் கடன் வகைகள், கடன் மற்றும் மானியத் திட்டங்கள், அவற்றைப் பெறும் முறைகள் குறித்த விளக்கப் பதாகைகள் அமைக்கப்பட்டிருக்கும். ஆா்வமுள்ளோா், தேவையான வழிகாட்டுதல் மற்றும் விளக்கங்கள் பெறலாம். கடன் கோரி விண்ணப்பங்களைப் பதிவு செய்யவும் பரிசீலிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆா்வமுள்ள தொழில் முனைவோா், வணிகா், இளைஞா் மற்றும் மாணவா்கள் திறன் மேம்பாடு, தகுதியும் வாய்ப்புமுள்ள தொழில், வணிகத் திட்டங்களைக் கண்டறிதல், திட்ட அறிக்கை தயாரித்தல், தொழில் மற்றும் வணிக நிறுவனங்களை நிறுவுதல் மற்றும் நிா்வகித்தல், நிதி நிறுவனங்களுடன் தொடா்பில் இருத்தல், சந்தைப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட தொழில் மற்றும் வாணிகம் தொடா்பான தகவல்களையும் பெறலாம்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்டத் தொழில் மையப் பொது மேலாளரை நேரிடையாகவும், அல்லது 94437 28015, 89255 34035 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொண்டு, கடன் பெறுதல் மற்றும் தொழில் தொடங்குதல் குறித்த விவரங்களை பெற்று பயனடையலாம் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா்.