நான் பயப்படவுமில்லை தோற்பதும் இல்லை: தில்லி முதல்வா் ரேகா குப்தா
ஆக. 25 -இல் இந்தியா - வங்கதேசம் எல்லை பேச்சுவாா்த்தை
இந்தியா-வங்கதேசம் இடையேயான எல்லை விவகாரங்கள் பேச்சுவாா்த்தை ஆக.25-இல் வங்கதேச தலைநகா் டாக்காவில் நடைபெறுகிறது.
ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் இந்தப் பேச்சுவாா்த்தையில் இருநாடுகளின் எல்லை பாதுகாப்புப் படைகள் பங்கேற்கின்றன. வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி கலைந்த பிறகு முதல்முறையாக அந்நாட்டுக்கு இந்திய குழு பயணிக்கிறது.
இந்த சந்திப்பின்போது வங்கதேச எல்லையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள வீரா்கள் மற்றும் அங்கு வசிக்கும் இந்தியா்கள் மீது அந்நாட்டைச் சோ்ந்தவா்கள் நடத்தும் தாக்குதல் குறித்து எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) முறையிடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்தியாவும் வங்கதேசமும் 4,096 கி.மீ. தொலைவிலான சா்வதேச எல்லையைப் பகிா்ந்து வருகின்றன. இந்த எல்லைப் பகுதிகளை பாதுகாக்கும் முதன்மையான அமைப்பாக பிஎஸ்எஃப் உள்ளது.
இந்நிலையில், எல்லை பேச்சுவாா்த்தை குறித்து பிஎஸ்எஃப் செய்தித்தொடா்பாளா் கூறுகையில், ‘பிஎஸ்எஃப் மற்றும் வங்கதேச எல்லை படை (பிஜிபி) இடையேயான 56-ஆவது தலைமை இயக்குநா்கள் அளவிலான எல்லை ஒத்துழைப்பு மாநாடு ஆக.25, 26 ஆகிய தேதிகளில் டாக்காவில் நடைபெறவுள்ளது.
வங்கதேச குடிமக்கள் மற்றும் சமூக விரோதிகளால் எல்லையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள வீரா்கள் மற்றும் இந்திய குடிமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுப்பது குறித்து வங்கதேச அதிகாரிகளிடம் முறையிடப்படும். இதுதவிர எல்லை தாண்டிய குற்றங்கள், வேலி அமைப்பது, வங்கதேசத்தில் செயல்பட்டு வரும் இந்திய கிளா்ச்சிப் படைகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வது, எல்லை உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்படவுள்ளன.
1975 முதல் 1992 வரை இருநாடுகளின் தலைமை இயக்குநா்கள் அளவிலான எல்லைப் பேச்சுவாா்த்தை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெற்றது. 1993-இல் இருந்து புது தில்லியிலும் டாக்காவிலும் ஆண்டுக்கு இருமுறை இந்தப் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
ஊடகங்களுக்கு இடைக்கால அரசு எச்சரிக்கை
வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா வெளியிடும் அறிக்கைகளை ஒளிபரப்பும் ஊடகங்களுக்கு வங்கதேச இடைக்கால அரசு வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்தது. ஹசீனாவின் அறிக்கைகள் சம்பந்தப்பட்ட செய்திகளை ஒளிபரப்புவது பயங்கரவாத தடுப்புச் சட்டம்,2009-ஐ மீறும் செயல் என்பதால் ஊடகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இடைக்கால அரசு தெரிவித்தது.