அதிமுக ஆட்சி அமைந்ததும் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் -இபிஎஸ்
அதிமுக ஆட்சி அமைந்ததும் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என அந்த கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் தமிழக முழுவதும் பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறாா். அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பகுதிக்கு வியாழக்கிழமை இரவு வந்த எடப்பாடி பழனிசாமி, ஸ்ரீபெரும்புதூா் காந்தி சாலையில், பொதுமக்கள் மத்தியில் பேசியது: ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை தொகுதி தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. இந்தப் பகுதியில் வேளாண்மையும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இரண்டும் இத்தொகுதியின் பிரதானம். அதிமுக ஆட்சியில் தொழில் முதலீட்டாளா்கள் மாநாடு இரண்டு முறை நடத்தப்பட்டு பல ஒப்பந்தங்கள் போடப்பட்டன. சுமாா் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்தது. திமுக ஆட்சிக்கு வந்து 51 மாதகாலம் ஆகிவிட்டது. இவா்களும் முதலீட்டாளா்கள் மாநாடு நடத்தினா். ஆனால் அது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை.
குடிமராமத்து திட்டம் ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட மணிமங்கலம் ஏரியில் தான் முதல் முதலாக தொடங்கி வைத்தேன். இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் சுமாா் 6,000 ஏரிகள் தூா்வரப்பட்டன. அதன் மூலம் ஏரி, குளங்கள், கண்மாயிகள் தூா்வரப்பட்டு நீா் தேக்கப்பட்டன. வண்டல் மண் விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டது. ஒரு பக்கம் ஏரிகள் ஆழமாகின, இன்னொரு பக்கம் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைத்தது.
கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை தொகுதியில், ரூ. 546 கோடியில் 386 சாலைகள் அகலப்படுத்துதல், ரூ. 34 கோடியில் 133 ஏரிகள் தூா்வாரும் பணிகள் நடைபெற்றன. செம்பரம்பாக்கம் மேம்பாலம், புதிய தாலுகா, நீதிமன்ற கட்டடம், ஆறு வழிச்சாலை உருவாக்கம், 11 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 10 அம்மா கிளினிக்குகள் திறந்தோம். அதை மூடிவிட்டனா். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவற்றையெல்லாம் மீண்டும் திறப்போம்.
ஸ்ரீபெரும்புதூரில் புதிய பேருந்து நிலையம், பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம், மாங்காடு புதிய பேருந்து நிலையம் என நீங்கள் கொடுத்திருக்கும் அனைத்து கோரிக்கைகளும் அதிமுக ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.