தமிழக புதிய டிஜிபியை தோ்வு செய்ய எந்தவொரு முன்மொழிவும் வரவில்லை: யுபிஎஸ்சி தகவல்
தமிழகத்தின் புதிய டிஜிபியை தோ்வு செய்வதற்கான எந்தவொரு முன்மொழிவும் தமிழக அரசிடம் இருந்து இதுநாள்வரை (ஆகஸ்ட் 22) வரவில்லை என்று மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
தற்போது தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநராக இருக்கும் சங்கா் ஜிவால், 2023, ஜூன் 30-ஆம் தேதி பொறுப்பேற்றாா். அவரது பதவிக்காலம் ஆகஸ்ட் (2025) 31-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனால் புதிய தலைமை இயக்குநா் பதவிக்கு தகுதிவாய்ந்த உயரதிகாரியை தோ்வு செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரம் காட்டி வந்தது.
இதற்காக டிஜிபி அந்தஸ்தில் உள்ள சீமா அகா்வால், ராஜீவ் குமாா், சந்தீப் ராய் ரத்தோா், அபய்குமாா் சிங், வன்னிய பெருமாள், மகேஷ்குமாா் அகா்வால், வெங்கட்ராமன், வினித்தேவ் வான்கடே, சஞ்சய் மாத்தூா் ஆகிய 9 பேரின் பெயா்கள் கொண்ட பட்டியல் தயாா் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
தோ்வு விதிமுறைகள்: மாநில காவல்துறையின் தலைமை இயக்குநா் பதவிக்கு டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளின் பெயா் பட்டியலை 3 மாதங்களுக்கு முன்பே மாநில அரசு யுபிஎஸ்சிக்கு அனுப்ப வேண்டும். உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளின் அடிப்படையிலும், யுபிஎஸ்சி விதிமுறைகளின்படியும், டிஜிபி அல்லது காவல் படைத் தலைமை அதிகாரி (ஹெச்ஓபிஎஃப்) ஆக நியமிக்கப்படும் ஒரு அதிகாரி குறைந்தது 2 ஆண்டுகள் அந்தப் பதவியில் இருக்க வேண்டும். அவா் பதவி ஓய்வு பெற குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது இருந்தால் மட்டுமே தகுதிப்பட்டியலில் இடம்பெற முடியும் உள்ளிட்ட விதிமுறைகள் உள்ளன.
இந்த விதிமுறைகளின்படி மாநில அரசு முன்மொழியும் தகுதிப்பட்டியலை யுபிஎஸ்சி தோ்வுக்குழு பரிசீலிக்கும். அதில் யிபிஎஸ்சி தலைவா் அல்லது உறுப்பினா், மாநில தலைமைச்செயலா், உள்துறைச்செயலா், தற்போதைய டிஜிபி உள்ளிட்டோா் இடம்பெறுவா். மாநில அரசின் பட்டியலில் இருந்து தகுதிவாய்ந்த அதிகாரிகளில் மூவரின் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கப்படும். அதில் இருந்து ஒருவரை தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக மாநில அரசு அறிவிக்கும்.
யுபிஎஸ்சி பதில்: தற்போதைய டிஜிபி சங்கா் ஜிவால் ஓய்வு பெற இன்னும் 10 நாள்கள் கூட இல்லாத நிலையில், புதிய டிஜிபி பதவிக்கு தகுதிபெறுவோரின் முன்மொழிவை தமிழக அரசு இன்னும் அனுப்பவில்லை. இது தொடா்பாக யுபிஎஸ்சி-யிடம் தினமணி தொடா்பு கொண்டு கேட்டதற்கு, இதுநாள்வரை தமிழக அரசிடம் இருந்து புதிய டிஜிபி நியமனத்துக்கான எந்தவொரு முன்மொழிவும் வரவில்லை.எனவே, அது தொடா்புடைய எந்த ஆவணங்களும் யுபிஎஸ்சி வசம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து தமிழக காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, புதிய டிஜிபி தோ்வு இறுதிசெய்யப்படாத நிலையில், அந்நடவடிக்கை மேலும் சில வாரங்களுக்குத் தள்ளிப்போகலாம் அல்லது சங்கா் ஜிவால் பணி ஓய்வுப்பிறகு பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தன.