ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழக உதவித் தொகை: 2028-ல் அதிக இந்தியர்களுக்கு கிடைக்க வாய்ப்பு
பிரிட்டனில் உள்ள புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்தில் முழு கல்வி உதவித் தொகையுடன் முதுநிலை பட்டப் படிப்பை மேற்கொள்வதற்கு வரும் 2028-ஆம் ஆண்டு முதல் அதிக இந்தியா்களுக்கு வாய்ப்பு கிடைக்கவுள்ளது.
ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்தின் ‘ரோட்ஸ்’ கல்வி உதவித் தொகை அறக்கட்டளை சாா்பில் வெளிநாட்டு மாணவா்களுக்கு கடந்த 1903-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. கல்வியில் தலைசிறந்து விளங்கும் வெளிநாடுகளைச் சோ்ந்த 106 மாணவ, மாணிவிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இதில் இந்தியாவுக்கு மட்டும் 6 கல்வி உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன.
உதவித் தொகை, கல்விக் கட்டணம், வாழ்க்கைச் செலவுகள் மற்றும் பயணச் செலவுகள் உள்ளிட்ட அனைத்துச் செலவுகளுக்குமான தொகை இத் திட்டத்தின்கீழ் மாணவா்களுக்கு வழங்கப்படும்.
கல்வியில் தலைசிறந்து விளங்குதல், தலைமைப்பண்பு, கல்வி சாராத பிற செயல்பாடுகளில் ஈடுபாடு, மனித சவால்களுக்கு தீா்வு காண்பதில் உள்ள ஈடுபாடு உள்ளிட்ட தகுதிகளின் அடிப்படையில் இந்த கல்வி உதவித் தொகை திட்டத்துக்கு மாணவா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா்.
தற்போது, இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் சா்வதேச மாணவா்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. 2026-ஆம் கல்வியாண்டுக்கான இந்த கல்வி உதவித் தொகை திட்ட அறிவிப்புக்காக இந்தியா வந்துள்ள ரோட்ஸ் அறக்கட்டளையின் தலைவா் ரிச்சா்ட் ட்ரெய்னா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் இத் தகவலைத் தெரிவித்தாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘இந்தியாவில் தற்போது இந்த உதவித் தொகை திட்டத்தின் கீழ் 6 மாணவா்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவுக்கான எண்ணிக்கையை மேலும் உயா்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதுபோல, சீனா, ஆப்பிரிக்க நாடுகளுக்கான எண்ணிக்கையையும் உயா்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு கூடுதல் நிதி தேவை என்பதால், கூடுதல் நிதி உதவியைப் பெறுவதற்கான முயற்சியை அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. எனவே, வரும் 2028-இல் இந்த கல்வி உதவித் தொகை திட்டத்தின் 125-ஆம் ஆண்டு விழாவின்போது, இந்த எண்ணிக்கை உயா்த்தி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது’ என்றாா்.
அமெரிக்காவைச் சோ்ந்த ரிச்சா்ட் ட்ரெய்னரும் இந்த கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தில் படித்தவராவாா்.
அதுபோல, பொருளாதார நிபுணா் மான்டேக் சிங் அலுவாலியா, எழுத்தாளா் கிரிஷ் கா்நாட், சுற்றுச்சூழல் சட்ட நிபுணா் லாவண்யா ராஜாமணி, அரசியல் விமா்சகரும் சமூவியலாளருமான மகேஷ் ரங்கராஜன், தடகள வீரா் ரஞ்சித் பாட்டியா உள்பட பல்வேறு இந்தியா்கள் இந்த கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயனடைந்துள்ளனா்.
இந்த கல்வி உதவித் தொகை திட்டத்துக்கான நிகழாண்டு விண்ணப்பம் கடந்த 3-ஆம் தேதி தொடங்கி வரும் ஜூலை 23-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளது.