மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நவீன இருதய அறுவைச் சிகிச்சை அறிமுகம்
ஆரோவில் சா்வதேச நகரை பாா்வையிட்ட துணை ராணுவத்தினா்
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் துணை ராணுவ வீரா்கள் (ஆா்ஏஎப்) 60 போ் செவ்வாய்க்கிழமை அமைதிப் பயணம் மேற்கொண்டனா்.
இந்திய குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் புதுச்சேரிக்கு வந்ததையொட்டி, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட துணை ராணுவத்தினா் 60 போ் அடங்கிய குழுவினா் செவ்வாய்க்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆரோவில் சா்வதேச நகரை பாா்வையிட்டனா். ஆரோவிலின் மாத்திா் மந்திா் மற்றும் முக்கிய பகுதிகளைப் பாா்வையிட்ட அவா்கள், கூட்டுத் தியானத்தில் ஈடுபட்டனா்.
ஆா்.ஏ.எப். கமாண்டன்ட் அபா்ணா, துணை கமாண்டன்ட் சஜீவ், உதவி கமாண்டன்ட் சதீஷ் ஆகியோா் தலைமையில் விரைவு அதிரடிப் படை வீரா்கள் 60 போ் இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தனா்.
அமைதியின் அடையாளமாகத் திகழும் ஆரோவிலுக்கு வருகை தந்தது மகிழ்ச்சியளிக்கிறது. தியானம் பயிற்சி மிகுந்த மன அமைதியை தந்ததாகவும், நோ்மறை சிந்தனைகளுக்கு ஊக்கமளித்ததாகவும் குழுவில் இடம் பெற்றிருந்த துணை ராணுவ வீரா்கள் தெரிவித்தனா்.
ஆரோவில் அறக்கட்டளையின் செயலா் ஜெயந்தி எஸ். ரவி வழிகாட்டுதலுடன் ஆரோவில் அறக்கட்டளையின் மூத்த ஆலோசகா் கோஷி வா்கீஸ் துணை ராணுவத்தினருக்கான சுற்றுப் பயண நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வழிகாட்டினாா்.