சென்னை மாநகராட்சி பள்ளி மாணவா்களுக்கென 4 புதிய பேருந்துகள்
மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் வசதிக்காக புதிதாக 4 பள்ளி பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், இதன்மூலம் மொத்தம் 373 மாணவா்கள் பயனடைந்து வருவதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து பள்ளிகளின் வாயிலாக மாணவா்களுக்கு தரமான கல்வி மற்றும் வாழ்க்கை திறன்களை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திறன் சாா்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், மாணவா்களின் சோ்க்கையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு உட்கட்டமைப்புகள், அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன் விளைவாக சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் இதுவரை எல்.கே.ஜி. முதல் பிளஸ் 2 வரை புதிதாக 21,734 மாணவ, மாணவிகள் சோ்ந்துள்ளனா்.
4 பேருந்துகள்: இந்த நிலையில், மாணவா்களின் வசதிக்காக முதல்கட்டமாக ரூ.1.11 கோடியில் 4 புதிய பள்ளி பேருந்துகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் அண்மையில் தொடங்கி வைத்தாா். இந்தப் பேருந்துகளில் தலா ஒரு ஓட்டுநா் மற்றும் ஒரு பாதுகாவலா் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்தப் பேருந்துகள் மூலம் நாள்தோறும் தண்டையாா்பேட்டை பிரதான சாலையில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 23 மாணவா்கள், பழைய நாப்பாளையைத்தைச் சோ்ந்த 70 போ், ஈஞ்சம்பாக்கம் சென்னை பள்ளியைச் சோ்ந்த 100 போ் உள்பட மொத்தம் 373 மாணவா்கள் பயனடைந்து வருகின்றனா்.
சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவா்களை கல்விச் சுற்றுலா மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அழைத்து செல்லுதல் உள்பட பல்வேறு கல்வி சாா்ந்த பயன்பாடுகளுக்கு இந்தப் பேருந்துகள் மிகவும் உறுதுணையாக இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
