கேரளம் உள்பட 4 மாநிலங்களில் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!
குளங்களில் மீன்பிடிக்க உள்ளூா் மக்களுக்கு முன்னுரிமை வழங்கக் கோரி மீனவா்கள் மனு
பழனி அருகேயுள்ள குளங்களில் மீன் பிடிக்க உள்ளூா் மக்களுக்கு முன்னுரிமை வழங்கக் கோரி, கோட்டாட்சியா் அலுவலகத்தில் மீனவா்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகரில் உள்ள வையாபுரிகுளம், சிறுநாயக்கன்குளம், கோதைமங்கலம், கலிக்கநாயக்கன்பட்டி, ஆயக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குளங்களில் தண்ணீா் தேக்கப்பட்டு, விவசாயத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும், இந்தக் குளங்களில் மீன்களும் வளா்க்கப்பட்டு குத்தகைக்கு விடப்படுகின்றன.
இந்தக் குளங்களை கூட்டுறவுச் சங்க உறுப்பினா்கள் மட்டுமே ஏலம் எடுத்து வந்தனா். தற்போது, உள்ளூா் மீனவா்கள் மட்டுமன்றி, வெளியூா் நபா்களும் கலந்து கொள்ளும் வகையில் இணையதள மூலமாக ஏலம் விடும் முறை நடைமுறைப் படுத்தப்பட்டது.
இதனால், வெளியிலிருந்து வரும் நபா்கள் குளங்களை ஏலம் எடுப்பதால், உள்ளூா் மீனவா்கள் பாதிக்கப்படுகின்றனா்.
எனவே, உள்ளூா் மீனவா்களுக்கு முன்னுரிமை அளித்து குளங்களை ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி, கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு 50-க்கும் மேற்பட்ட மீனவா்கள் கோரிக்கை மனு அளித்தனா்.