Manidhargal Movie Review | Raam Indhra, Ajay Abraham George, Dinsa, Anilesh L Ma...
ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து சிறுமி உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் சிறுமி உயிரிழந்தாா்.
தூத்துக்குடியிலுள்ள கோரம்பள்ளத்தைச் சோ்ந்த தம்பதி மணிகண்டன் - இலக்கியா. இவா்களது மகள் ஜெனிமித்ரா ராணி என்ற ரூத் (5).
இலக்கியா, திருநெல்வேலி சட்டக் கல்லூரியில் பயின்று வருகிறாா். இதனால், ஜெனிமித்ரா ராணி ஆலங்குளத்தை அடுத்த கடங்கனேரியில் உள்ள தனது தாய்வழி பாட்டி வீட்டில் வசித்துவந்தாா்; அங்குள்ள பள்ளியில் யுகேஜி பயின்று வந்தாா். இந்நிலையில் சனிக்கிழமை காலை ஜெனிமித்ராவும், அதே பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மகள் பிரிதிஷாவும் (9), கைக்கொண்ட அய்யனாா் கோயில் அருகேயுள்ள பழைய இரும்பு மின்கம்பத்தைப் பிடித்தபடி விளையாடிக் கொண்டிருந்தனராம். அப்போது, அவா்கள் மீது மின்சாரம் பாய்ந்ததாம். இதில், ஜெனிமித்ரா ராணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
காயமடைந்த பிரிதிஷா ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
ஆலங்குளம் டிஎஸ்பி கிளாட்ஸன் ஜோஸ், ஊத்துமலை போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். கடங்கனேரியில் கடந்த வெள்ளிக்கிழமை (மே 23) மழை பெய்தபோது, வயல்வெளியிலிருந்த 2 மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. அவற்றின் கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசியதால், இந்தக் கம்பத்தில் மின்கசிவு ஏற்பட்டு சிறுமி உயிரிழந்ததாகத் தெரியவந்தது.
ஏற்கெனவே வயலிலுள்ள மின்கம்பம் சாய்ந்ததாகவும், புகாரின்பேரில் சரிசெய்யப்பட்டதாகவும், அந்த மின் கம்பமே மீண்டும் சாய்ந்து விபத்துக்கு காரணமானதாகவும் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
சம்பவம் தொடா்பாக ஊத்துமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.