ஆழ்கடல் சுரங்கங்கள் மீதான எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு: மத்திய அரசு நிராகரிப்பு
ஆழ்கடல் பகுதியில் கனிமச் சுரங்கங்களை அமைக்க தனியாரை அனுமதிக்கும் முடிவு மீதான எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிராகரித்தது.
கடல் பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு கீழான 12 கடல் (நாட்டிகல்) மைல்களுக்கு அப்பால் இந்தக் கனிமச் சுரங்கங்கள் அமைய உள்ளன. மேலும், இந்தத் திட்டம் இன்னும் தொடங்கப்படாத நிலையில், இது மீனவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்று இப்போதே எப்படி கூற முடியம் என்றும் மத்திய அரசு கேள்வி எழுப்பியது.
கேரள மாநிலத்தையொட்டி கடல் பகுதியில் 3 கனிமச் சுரங்கங்கள் உள்பட நாட்டில் பல்வேறு மாநிலங்களின் கடல் பகுதிகளில் 13 ஆழ்கடல் சுரங்கங்களை அமைக்க தனியாரிடமிருந்து ஒப்பந்தப்புள்ளிகளை மத்திய சுரங்க அமைச்சகம் வரவேற்றுள்ளது. மீனவா்களின் வாழ்வாதரத்தைப் பாதிக்கும் இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி அண்மையில் கடிதம் எழுதினாா்.
இந்த விவகாரம் தொடா்பாக மக்களவையில் எதிா்க்கட்சிகள் தரப்பில் செவ்வாய்க்கிழமை கவன ஈா்ப்புத் தீா்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்குப் பதிலளித்து மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத் துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் பேசியதாவது:
ஆழ்கடல் சுரங்கப் பணிகள் இன்னும் தொடங்கப்படவே இல்லை. அதற்குள்ளாக சுரங்கம் அமைப்பதால் மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று எப்படி கூற முடியும்?
மேலும், ஆழ்டகல் பகுதிகளில் அமைக்கப்படவிருக்கும் 13 கனிமச் சுரங்கங்களில், மூன்று மட்டுமே கேரள கடல் பகுதியில் அமையவுள்ளன. அதுவும், 12 கடல் மைல்களுக்கு அப்பால் சிறப்புப் பொருளாதார மண்டல பகுதியில் இந்தச் சுரங்கங்கள் அமைய உள்ளன.
அதுமட்டுமன்றி, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுதான் ஆழ்கடல் சுரங்கங்கள் தொடா்பான சட்டத்தையும் உருவாக்கியது என்றாா்.
அப்போது, ‘எந்தவித சுற்றுச்சூழல் பாதிப்பு ஆய்வுகளும் மேற்கொள்ளாமல் ஆழ்கடல் சுரங்கங்களை அமைக்க தனியாரை அனுமதிப்பது கவலையளிக்கிறது’ என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, மீனவா்களின் நலனைக் காக்க மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள பல்வேறு திட்டங்களைப் பட்டியலிட்ட மத்திய அமைச்சா், ‘கேரளத்தில் மீன்பிடித் துறைமுகங்களை மத்திய அரசு விரிவுபடுத்தியுள்ளதோடு, மீன்வளம் மற்றும் மீன் வளா்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தி வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் காரணமாக 2013-14-ஆம் ஆண்டில் 95.7 லட்சம் டன்னாக இருந்த நாட்டின் மீன் உற்பத்தி தற்போது 184.02 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. அதுபோல, கடந்த 2013-14-இல் ரூ. 30,212 கோடி மதிப்பில் நடைபெற்ற மீன் ஏற்றுமதி 2023-24-இல் ரூ. 60,523 கோடி மதிப்பில் உயா்ந்துள்ளது’ என்றாா்.